காய்கறி மார்க்கெட்டில் கத்திரிக்காய் விற்கும்போது பார்த்திருக்கிறீர்களா? போட்டி போட்டுக் கொண்டு விற்பார்கள். “கிலோ இருபது ரூபாய்” என்று ஒருவர் கத்திக்கொண்டிருந்தால், எதிரில் இருப்பவர், “கிலோ பத்தொன்பது” என்று இன்னும் சத்தமாய் கத்துவார்.
அதுவும் நேரம் நேரம் ஆக ஆக, அடுத்த நாள் வைத்து விற்க முடியாத காய்கறியாய் இருந்தால் இன்னும் விலை குறைந்து கொண்டே இருக்கும். அது மாதிரியான போட்டி மார்க்கெட்டாகத்தான் ஆகிவிட்டது பணியாளர் சந்தையும்.
என்ன இங்கே போட்டியில் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. எந்தச் செய்தித்தாளை எடுத்தாலும், ‘விற்பனையாளர் தேவை. சம்பளம் 8000’ என்று முதல் நாள் வந்திருக்கும். அடுத்த இரண்டு நாளில் போட்டி நிறுவனத்தின், ‘ஆட்கள் தேவை’ விளம்பரத்தில், ‘விற்பனையாளர் தேவை சம்பளம் 10000 மற்றும் தங்குமிடம் இலவசம்’ என்றிருக்கும். அடுத்த இரண்டு நாட்களில் ‘விற்பனை யாளர் தேவை. தங்குமிடம், உணவு இலவசம்’ என்றொரு விளம்பரம் வரும்.
சமீபத்தில் ஒரு நிறுவனம் மாதம் 24 நாள் வேலைபார்த்தால் 30 நாள் சம்பளம் என்று விளம்பரம் செய்திருந்தது.
சரி இப்படியெல்லாம் விளம்பரம் செய்ததால், போட்டி போட்டுக்கொண்டு வேலைக்கு ஆட்கள் கிடைத்துவிட்டார்களா என்றால், அதுதான் இல்லை. காரணம், ‘இந்த விளம்பரத்தில் சொல்லப்பட்டிருப்பது போல எல்லாம் கொடுப்பதில்லை, இதெல்லாம் எலி பிடிக்க பொறியில் வைக்கப்படும் வடை’ என்று நினைக்கிறார்கள் வேலை தேடுபவர்கள்.
நாங்கள் மனித வள மேம்பாட்டு ஆலோசர்களாக இருக்கும் ஒரு பிரபல ஜவுளி நிறுவனம், இந்த எண்ணத்தை மாற்றித்தர ஒரு திட்டம் வகுத்து தருமாறு எங்களிடம் கேட்டார்கள்.
என்ன சம்பளத்திற்கு விளம்பரம் கொடுக்கிறோமோ அந்த சம்பளத்திற்கு தகுதி உள்ளவர்களை மட்டுமே வேலைக்கு எடுப்பது என்பதுதான் நாங்கள் வகுத்தளித்த திட்டம்.
முழுத் தகுதியில்லாதவர்களை ஆள் பற்றாக் குறையின் காரணமாக நாம் வேலைக்கு எடுத்து விடுகிறோம்.
எடுத்த பிறகு அவர்கள் தகுதிக்கு ஏற்ற சம்பளத்தை நிர்ணயிக்கிறோம் அல்லது உன் வேலையை பார்த்து விட்டு சம்பளத்தை உயர்த்தித் தருகிறோம் என்று உற்சாகப் படுத்துகிறோம்.
ஆனால் பத்தாயிரம் சம்பளம் என்ற எதிர்ப்பார்ப்போடு வந்தவர்கள் தங்கள் தகுதியை சௌகர்யமாக மறந்து விட்டு விற்பனையாளர் வேலைக்கு வந்தால் பத்தாயிரம் தருவதாக விளம்பரம் செய்துவிட்டு இப்போது ஆறாயிரம் தான் கொடுக்கிறார்கள்.
இது ஏமாற்று வேலை என்று தெரிந்தவர்களிடம் புலம்ப ஆரம்பிக்கிறார்கள்.
மேலும் ஒரு மாத இரண்டு மாத காலத்திற்குள் எல்லாம் ஆறாயிரம் சம்பளக்காரரால் பத்தாயிரம் சம்பளம் வாங்குகிற அளவிற்கெல்லாம் தன்னை உயர்த்திக்கொண்டு விட முடியாது.
ஒரு விற்பனையாளர் வேலைக்கு சேர்ந்த போது இருந்த செயல் திறனிலேயே இருப்பார். ஆனால் இரண்டு மாதத்திற்கு பிறகு நாம் சம்பளத்தை உயர்த்தித் தருவோம் என்று நினைத்துக்கொண்டு காத்திருப்பார்.
செயல் திறனில் மாற்றம் இல்லாததால் நிறுவனங்கள் சம்பளத்தில் மாற்றம் கொண்டு வருவதில்லை. இதை நாம் பணியாளர்களுக்குப் புரிய வைப்பதும் இல்லை. இதுவும் அவ நம்பிக்கை அதிகமாக ஒரு காரணம்.
இதனால் அதிக சம்பளம் என்கிற விளம்பரங்கள் எந்த நம்பிக்கையையும் யாரிடமும் ஏற்படுத்துவதில்லை. இனி ஏற்படுத்தப் போவதுமில்லை.
எனவே விளம்பரத்தில் தரும் சம்பளத்திற் கேற்ற தகுதியுள்ளவர்களை மட்டும் வேலைக்கு எடுங்கள். 5 பேர் வேலைக்கு சேர்ந்தால் கூட போதும். ஆனால் பத்தாயிரம் சம்பளம் தருகிறார்கள் என்ற செய்தி வாய் வழியாய் தீயாய் பரவும். திறமையான பலர் நம்பிக்கையோடு தேடி வருவார்கள் என்றோம். அது நடந்தது.
நீங்களும் முயற்சித்து பாருங்கள்.
thirumurugan
nice tactics