வாழ நினைத்தால் வாழலாம்!

ருத்ரன் பதில்கள்

நான் நேர்மறையில் சிந்திக்கிறேன். என் மனைவி எதிர்மறையில் சிந்திக்கிறாள். எனக்கென்று ஓர் இலக்கு வைத்திருக்கிறேன். அவள் இலக்கில்லாமல் இருக்கிறாள். மனைவிக்கு இலக்கை எப்படி உருவாக்குவது? அவளை எப்படி நேர் மறையாக சிந்திக்க வைப்பது?

இதையே அவர்கள் சொல்லலாம். இவையெல்லாம் அவரவருடைய கண்ணோட்டம்தான். திருமணமான ஆரம்ப நாட்களில் இந்த சிக்கல்கள் வருவதில்லை. குடும்ப கௌரவம், சுய கௌரவம், மனைவியால் கிடைக்கிறசந்தோஷங்கள் கிடைக்கின்றன என்பதற்காக அமைதியாக இருந்தீர்கள்.

சாத்தியமாவது எதுவோ அதுவே சௌகர்யம். எனவே முதல்படி மற்றவர்கள் சரியா தவறா என்று பார்க்காதீர்கள். நீங்கள் நடைமுறை சார்ந்தவரா என்று பாருங்கள். நீங்கள் வைத்திருப்பது கனவா அல்லது நடக்கும் சாத்தியம் இருக்கிறதா என்று பாருங்கள்.

உங்களைப் போன்ற மிகவும் நெருக்கமான வர்கள் சொன்னால் மனைவி கேட்காமல் இருக்கலாம். ஆனால் அவர் யார் சொன்னால் கேட்பார்களோ அவர்களைப் பேச வைக்க வேண்டும். அப்போதுதான் மாறும். நீங்கள் சொன்னால் மாறாது.
என் நண்பரின் மகள் திடீரென்று தண்ணீர் அதிகமாகக் குடிக்கிறாள். இரவில் தூங்குவது இல்லை. சாப்பாடு கொஞ்சமாக சாப்பிடு கிறாள். மனிதர்களைக் கண்டாலே பயப் படுகிறாள். இது மனநோயின் ஆரம்பமா என்ன காரணம்?

அதிகமாகக் தண்ணீர் குடித்தால் அந்தப் பெண்ணிற்கு நாக்கு வறட்சியிருக்கலாம். ஆனால் நீங்கள் சொல்கிற மற்ற அறிகுறிகளைப் பார்க்கும் போது அதீதபயம் இருக்கலாம் என்று தோன்றுகிறது. ஆனால் இந்தப் பெண் பிறந்த போதிலிருந்து இப்போதுவரை அவளுடைய நடவடிக்கைகளைப் பற்றி முழுமையாகத் தெரிந்த கொண்ட பின்தான் ஆலோசனை சொல்லமுடியும்.

நான் ஒரு மாதத்திற்கு முன் என் உறவினர் களோடு சண்டை பிடித்தேன். தனிமையில் எனக்கு நானே மனதிற்குள் பேசிக் கொள்கிறேன். இது மன நோயா?
மனதுக்குள் பேசிக்கொள்வதை உணர்ந்தால் அது மனநோயல்ல. தன்னிலை உணராமல் பேசிக் கொண்டிருந்தால்தான் அது மனநோயின் அறிகுறியாகும்.

உறவினர்களோடு சண்டை போட்டேன். மனதிற்குள்ளேயே பேசிக் கொள்கிறேன் என்றால் அடிப்படையில் உங்களுக்கு உள்ளுக்குள் குற்ற உணர்வு இருக்கிறது என்று தெரிகிறது. நீங்கள் ஏதோ தவறு செய்துவிட்டோமோ என்று நினைக்கிறீர்கள். குற்ற உணர்விருந்தால் மன்னிப்பு கேளுங்கள். தவிர்க்க முடியாத பிரிவு அதனால் வருமென்றால், இருக்கிற மற்ற உறவுகளை நல்ல முறையில் பேணுவது எப்படி என்று யோசியுங்கள்.

தனக்குத்தானே பேசிக்கொள்வது இந்த விஷயத்திற்காக மட்டும் என்றால் அது தற்காலிகம் தான். அது போய்விடும். எந்தவொரு தீவிரமான தாக்கமும் பாதிப்பும் ஆறுமாதத்திற்குமேல் உங்களுக்குள் ஒரு சலனத்தை ஏற்படுத்தாது. அதிலிருந்து நீங்கள் மீண்டுவிடுவீர்கள். இது போன்ற தனிப்பட்ட விஷயங்களுக்கு இப்படி விளக்கம் சொல்லமுடியாது. இதைப்பற்றிய முழு விபரங்கள் அறிய பல துணைக் கேள்விகளுக்கு பதில் பெற வேண்டியிருக்கும்.

ஓஷோ தன் புத்தகத்தில், கிருஷ்ணர் எல்லா விஷயத்திலும் வெற்றி கண்டிருக்கிறார். அதற்குக் காரணம் அவர் அவற்றை விளையாட்டாகவே கருதி செயலில் இறங்கினார்; வெற்றி கண்டார். ஒருபோதும் அதை தீவிரமாகவே பார்த்ததில்லை என்கிறார். ஆனால் இப்போது நடக்கிற சுய முன்னேற்றக் கூட்டங்களில் பலரும் நீங்கள் வெற்றி பெற வேண்டும் என்று உங்களை நீங்களே ஊக்கப் படுத்திக் கொண்டால் வெற்றி பெறுவீர்கள் என்கிறார்கள். இவை ஒன்றுக்கொன்று முரண்படுகிறது. இது பற்றி சொல்லுங்கள்.
உள்ளுக்குள் ஜெயிக்க வேண்டும் என்று மற்றவர்கள் சொல்லி யாரும் ஜெயித்ததே கிடையாது.

கிருஷ்ணனை எடுத்துக் கொண்டால், ஓஷோ சொல்வது போல கிருஷ்ணர் எதைப் பற்றியும் கவலைப்படாமல், வாழ்க்கையை ஒரு கொண்டாட்டமாக வாழ்ந்தவர்.
கிருஷ்ணரைப் பற்றி ராஜாஜி சொல்லும் போது, ‘ராமனுக்கு, தான் தெய்வம் என்பது தெரியாது. அதனால் அவன் அழுதான். ஆனால் கிருஷ்ணருக்கு, தான் தெய்வம் என்பது தெரியும். அதனால்தான் அவன் எப்போதுமே சிரித்துக் கொண்டேயிருந்தான்’ என்பார்.
உனக்கு உள்ளிருக்கிற சக்தியை நீ உணர உணர உன்னை துன்பம் நெருங்காது என்பதுதான் இதன் பொருள். இதனால் எடுத்துக்கொண்ட காரியங்களில் கிருஷ்ணன் வெற்றி பெற்றார் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஐந்து மணிநேரத்தை இணையத்தில் செல விட்ட பிறகுதான் தெரிகிறது அது பயனில்லாத பொழுது என்று. இணையத்தை எப்படி சிறந்த முறையில் பயன்படுத்துவது?

நானும் என் வாழ்க்கையின் பல மாதங்களை இணையத்தில் செலவிட்டிருக்கிறேன். புதிதாக ஏதேனும் வரும்போது மனிதன் ஆர்வம் கொள்வது இயல்புதான். போகப்போக இணையத்தில் நாமே வடிகட்ட ஆரம்பிப்போம். இந்த தளத்திற்கு செல்ல வேண்டாம்.
குறிப்பிட்ட தலைப்பில் தேடினோமென்றால் அந்தப் பதிவுகளை ஆராய வேண்டும். குறிப்பாக மனஅழுத்தம் பற்றிய பல பதிவுகளை காணமுடியும்.

ஆனால் அதை பதிவு செய்தது யார் என்று பார்த்தால் தெளிவாகி விடும். ஒரு மனநல மருத்துவர் எழுதியிருந்தால் அந்தப் பதிவு தரமானதாக இருக்கும் என்று தீர்மானித்து விடலாம். அதுவே யாரோ ஒருவர் சாதாரணமாக தன் வலைப்பூவில் எழுதியிருந்தால் அதுபற்றி நாம் பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை.

இணையத்தில் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. நமக்குத் தேவையானதை தேர்ந்தெடுக்கும் தெளிவு நமக்கு வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *