என் அமெரிக்கப் பயணம் : பயண அனுபவங்கள்

– மரபின் மைந்தன் ம. முத்தையா

அமெரிக்காவின் தொன்மையான மாநிலமாகிய டெக்ஸாஸில் உள்ள டல்லாஸ், பழமையின் சின்னங்களைக் காப்பாற்றி வைத்திருக்கும் கலையழகு நகரம். ஒற்றை நட்சத்திர அந்தஸ்து கொண்டது டெக்ஸாஸ் மாநிலம்.


புதிதாய் ஒரு தேசத்திற்குள் போகிறபோது, அதன் புறத்தோற்றத்தின் பிரம்மிப்புகள் கொஞ்ச நேரத்தில் அடங்கும். புத்திக்குள் புலனாய்வு ஆர்வமொன்று தொடங்கும்.

அமெரிக்காவை அப்படி அறிந்து கொள்வதற்கான ஆரம்பப் புள்ளியாய் டல்லாஸ் அமைந்தது. நாங்கள் தங்கியிருந்த ரெனாய்ஸன்ஸ் நட்சத்திர விடுதியின் வாசலிலேயே ரயில் நிலையமொன்று இருந்தது. உள்ளூர் ரயில்கள் அங்கே விரைந்து வந்து வினாடிக் கணக்கில் நின்று “விர்” ரென்று புறப்படும். தானியங்கி எந்திரங்கள் தான் டிக்கெட் கொடுக்கின்றன.

ஒரு நாள் இரவு, விடுதிக்குத் திரும்பும்போது, வாயிலை நெருங்கும் நேரத்தில் ரயில்வே கேட் போடப்பட்டது. அதுவும் தானியங்கிதான். “அடடா! ரயில்வே கேட் போட்டாச்சே” என்று சொல்லி முடிப்பதற்குள் ரயில் கடந்தது. அடுத்த விநாடியே கேட் திறந்தது.

கூப்பிடு தூரத்திற்கு ரயில் வந்த பிறகே கேட் போடுகிறார்கள். அதிகபட்சம் ஐந்து விநாடிகளுக்குள் திறந்து விடுகிறார்கள். இந்த ஒழுங்கை நெருங்கிக் கொண்டிருக்கிறது சென்னையின் மின் ரயில் திட்டம் என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்தான்.

அமெரிக்காவின் அற்புதமான அம்சங்களில் ஒன்று, பசுமைக்குத் தருகிற முக்கியத்துவம். டல்லாஸில், எங்கள் விடுதியைத் தொட்டுக் கொண்டே கணிசமான ஏக்கர் அளவில் அடத்தியானதொரு நகரக்காடு இருந்தது. மதஆஅச சஅபமதஅகஐநப என்ற பலகை, உள்ளே உள்ள பறவைகள் மற்றும் சிறுவிலங்குகள் பற்றிய பெயர்ப் பலகை, அந்த நகரக்காடு யாருடைய நினைவில் நிறுவப்பட்டிருக்கிறது என்கிற விபரம், எல்லாவற்றையும் படிப்படியாகப் படித்தபடியே நடைபயில்வதற்குக் கான்க்ரீட் சாலையும் இருந்தது.

அந்தக் கான்க்ரீட் சாலையின் திருப்பங்களில் அமர்ந்து காற்று வாங்கிக் கொண்டிருக்கும் குறுமுயல்கள், காலடிச் சத்தம் கேட்டவுடன் குதித்தோடி விடுகின்றன.
குயிலோசையும் ரயிலோசையும் அருகருகே கேட்கிற அதிசயம் அங்கே அன்றாடம் அரங்கேறுகிறது.

டல்லாஸில் நாங்கள் பார்க்க விரும்பிய மற்றோர் இடம், அமெரிக்க அதிபர் ஜான் கென்னடி சுடப்பட்ட இடம். ஒரு கட்டிடத்தின் ஆறாவது மாடியில் பதுங்கியிருந்த கொலையாளியின் துப்பாக்கிக் குண்டுக்கு, திறந்த காரில் பயணமான கென்னடி பலியானது டல்லாஸ் நகரில்தான். 1963 நவம்பர் 22ல் நடந்த சம்பவம் அது. மிக இளைய வயதில் ஜனாதிபதியாகி, ஆயிரம் நாட்களுக்குள் கொல்லப்பட்ட ஜான் கென்னடியை அமெரிக்கா இன்னும் மறக்கவில்லை.

டாக்டர் கு. ஞானசம்பந்தனின் கல்லூரித் தோழர் திரு. ராம்குமார், எல்லா இடங்களுக்கும் கையில் கதைப் புத்தகத்துடனேயே வரும் அவருடைய குட்டிப் பையன் சுபாஷ், திரு. ராம்குமாரின் நண்பர் திரு. சந்தானம் ஆகியோருடன் சிக்ஸ்த் ஃப்ளோர் மியூசியம் என்ற அந்த இடம் நோக்கிப் புறப்பட்டோம்.

பலத்த பாதுகாப்புடன் திகழும் அந்த மியூசியத்தில் கணிசமாய் ஒரு கட்டணம் வாங்கிய பிறகே உள்ளே அனுமதிக்கிறார்கள். “காசு கொடுத்து விட்டோம் என்பதற்காக இங்கே குடியேறி விடாதீர்கள்” என்று சொல்வதைப் போல, சுற்றிப் பார்ப்பதற்கென்று நேர வரையறையும் உண்டு.
ஜான்கென்னடியின் புகைப்படங்கள், அவரது உற்சாகமான உரை வீச்சு, அரசியல் வாழ்க்கை, ஜாக்குலின் உடனான காதல் வாழ்வு, என்று திரும்பும் இடமெல்லாம் புகைப்படங்களும், திரைப்படங்களும்!

ஜான் கென்னடியின் கடைசி நிமிடங்கள் படமாக்கப்பட்டிருக்கின்றன. ஆறாவது மாடியில் பதுங்கியிருந்த கொலையாளி பிடிபடுவதிலிருந்து, அடுத்த சில நாட்களிலேயே போலீஸ் காவலில் இருக்கும்போதே அவன் சுட்டுக் கொல்லப்படுவது வரை பரபரப்பான காட்சிகள் கறுப்பு வெள்ளைத் திரைப் படங்களாய் ஓடுகின்றன.

சாட்சியங்கள் பற்றிய தகவல்கள், கொலையைப் படம் பிடித்த காமிராக்கள் என்று ஏகப்பட்ட ஆவணங்களும் பொருட்களும் அணி வகுத்திருக்கின்றன.

ஜான் கென்னடி சுடப்பட்ட செய்தி தாங்கி 1963ல் வெளியான பத்திரிகைகளின் பிரதிகள், இன்றும் ஐந்து டாலர், ஆறு டாலர் என்று விற்பனைக்கு வைக்கப்பட்டிருக் கின்றன.
அந்த வளாகத்தின் பல இடங்களில், ஜான் கென்னடியின் உத்வேகமூட்டும் சொற்பொழிவுகள் ஒலிபரப்பப்படுகின்றன.

இரவு ஏழு மணி வெய்யிலில் களைத்துப் போய் காரில் ஏறினோம். ஜப்பானிய உணவகம் ஒன்றிற்குப் போகலாம் என்றார் சந்தானம். அங்கே முற்றிலும் புதியதோர் அனுபவம் எங்களுக்கு.
உணவு மேசையை ஒட்டியே அடுப்பு அமைந்திருக்கிறது. பணிப்பெண் ஒருவர் நமக்குத் தேவையான உணவு வகைகளைக் குறிப்பெடுத்துக் கொண்டு போனார்.
சில நிமிடங்கள் கழித்து “ஹாய்” என்ற கூச்சலுடன் ஒரு சிறுவண்டியைத் தள்ளிக் கொண்டு வந்தார் ஜப்பானியர் ஒருவர். வண்டியில் பச்சை மாமிசம், பச்சைக் காய்கறிகள், மீன் துண்டங்கள், என்று எல்லா உணவுப் பொருட்களும் இருந்தன.

நாம் கேட்ட உணவு நம் கண்முன்னே தயாரானது. வந்திருப்பவர் சமையல்காரரா சர்க்கஸ்காரரா என்கிற சந்தேகம் ஏற்பட்டது. தலைக்கு மேல் கத்தியைச் சுழற்றுவதும், காய்கறிகளைத் தூக்கிப்போட்டு வெட்டுவதும், மீன் வாலை லாவகமாய் வெட்டித் தனது தொப்பியில் ஏந்துவதும் என்று ஏக களேபரம். பெரிய வெங்காயத்தை நறுக்கி ஒன்றின் மேல் ஒன்றாய் அடுக்கி நடுவில் எண்ணெய் ஊற்றிக் கொளுத்தியதும் பெரியதாக ஜ்வாலை எழுந்தது. நாம் பதறிப்போய் பார்ப்பதற்குள் நெருப்பை அணைத்துப் புகை மண்டலமாக்கி, வெங்காய கோபுரத்தை “கூ.. சிக்புக் சிக்புக்” என்று ரயில் போல் நகர்த்தியவர் நிமிட நேரத்திற்குள் அதை நறுக்கி வதக்கத் தொடங்கி விட்டார்.

எள்ளும் இறைச்சியும் கலந்த சுவையாக சாதம் மின்னல் வேகத்தில் தயாரானது. இறந்து போன கோழிக்கு எள்ளும் தண்ணீரும் இறைத்து இறுதிச் சடங்கு செய்கிறார் என்று எங்களுக்குள் பேசிக் கொண்டோம்.

இந்த உணவு மேசையில், டாக்டர் கு.ஞானசம்பந்தன் பற்றிய சுவையான தகவல்களை, அவரது கல்லூரிப் பருவ நண்பரான திரு. ராமகிருஷ்ணன் எனும் ராம்கி பரிமாறினார். டாக்டர் கு.ஞான சம்பந்தன் போடும் நாடகங்களில் எல்லாம் “ஸ்த்ரீபார்ட்” வேடம் போடுபவராம் ராம்கி. கடல் கடந்து போய்த் தன் கதாநாயகியை மீண்டும் கண்டு பிடித்திருக்கிறார் பேராசிரியர்.
டாக்டர் ஞானசம்பந்தனின் இன்னொரு பெயர் “அங்குச்சாமி” என்பதும், அவரை நண்பர்கள் “அங்கு” “அங்கு” என்று அழைப்பார்கள் என்பதும், அங்கு போய்த்தான் தெரிந்தது.

விடுதிக்குத் திரும்பியபோது, அங்கிருக்கும் அரங்கங்களில் ஒன்று, ஓர் ஒத்திகைக்காகப் பதிவு செய்யப்பட்டிருந்தது. திருமண ஒத்திகை!!ஆமாம்! அமெரிக்கர்கள் திருமணம் நடைபெறுகிறதென்றால் முன்னதாகவே அரங்கை வாடகைக்கு எடுத்து, திருமணத்தை ஒத்திகை பார்க்கிறார்கள்.

மணமகன், மணமகள், அவர்களுடைய பெற்றோர், எல்லோருமே வருகிறார்கள். சில திருமணங்களில் பாதிரியாரும் ஒத்திகைக்கு வருகிறார்.நம்மூரில் உறவினர்களை உப்பு ஜவுளிக்கு அழைப்பது போல் ஒத்திகைக்கு உறவினர்களை அழைக்கிறார்கள்.

மணமகனின் பெற்றோர் எங்கே அமர வேண்டும், மணமகளின் பெற்றோர் எங்கே அமர வேண்டும், மணமகனும் மணமகளும் எத்தனை அடிகள் எடுத்து வைத்து வரவேண்டும் என்பது உட்பட ஏகப்பட்ட விஷயங்கள் ஒத்திகை பார்க்கப்படுகின்றன.

இத்தனைக்கும் திருமணங்களுக்கு எத்தனை பேர் வருகிறார்கள் தெரியுமா? ஐம்பது பேர்! நூறு பேர் அழைக்கப்பட்டால் அது பெரிய கல்யாணம்! இதற்குப் போய் இவ்வளவு தூரம் விழுந்து விழுந்து ஒத்திகை பார்க்கிறார்கள் பாவம்.

நம்மைப் போல் ஆயிரக்கணக்கானவர்களை அழைத்து, கடைசி நேரத்தில் சில சமயம் மாங்கல்யத்தையும், சில சமயங்களில் மாப்பிள்ளையையும் தேடுகிற கலாட்டா கல்யாணத்தின் சுவாரசியம் அந்த ஒத்திகைக் கல்யாணங்களில் வருமா என்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *