சாதனைச் சதுரங்கம்

– தேவகோட்டை ம.திருவள்ளுவர்

அணியணியாய் இணைய உதவும் அழகிய சதுரங்கம்

நான்காவது சதுரம் நம்மைப் பிணைக்கும் சதுரம். நாம் அனைவரும் இணைந்து பணியாற்றுதலின் அவசியத்தை நமக்கு உணர்த்தும் ஒற்றுமைச் சதுரம்.

கீழ்காணும் சதுரத்தை உற்று நோக்கிடுங்கள். அது என்ன சொல்கிறது என்பது நமக்குப் பிடிபடும். அந்தச் சதுரத்தின் கிடைக்கோடு நமது தைரியத்தைக் குறிப்பதாகக் கொள்வோம். செங்குத்துக் கோடு நமது கருணையைக் குறிப்பதாக கொள்வோம். இந்த இரண்டு கோடுகளை அடிப்படையாகக் கொண்டுஅமையும் நான்கு சதுரங்களை நன்கு கவனிப்போம்.

முதலில் “வெல்ல …. தோற்க….” – என்னும் முதலாம் சதுரத்தை எடுத்துக்கொள்வோம். இதன் பொருள் என்னவெனில் “நான் வெல்வேன்…. நீ தோற்பாய்”-என்கிற அடிப்படையில் தொடங்கப்படும் முயற்சியை அல்லது நடவடிக்கையைக் குறிக்கும். இத்தகைய மனோபாவம் – விளையாட்டின் போதும், போரின் போதும் காணப்படக் கூடியதாகும். வாழ்க்கைக்கோ, வர்த்தகத்துக்கோ, உறவுமுறைக்கோ ஒத்துவராததாகும். “நான் வெல்ல வேண்டும் நீ தோற்க வேண்டும்” – என்று முனைகிறபோது, அவரிடம் தைரியம் அதிகமாகவும் கருணை மிகவும் குறைவாகவும் உள்ளதென்று பொருள். அதாவது முரட்டுத் தனம் மிகுந்து காணப்படும். வேகம் இருக்கும். ஆனால் விவேகம் இருக்காது. – இத்தகைய நிலை வாழ்க்கையை வசப்படுத்தவும் தலைமை தாங்கவும் உதவாது. “வெட்டு ஒன்று துண்டு ரெண்டு” என நடந்து கொள்ளும் இவர்களைப் பெரும்பாலானோர்க்குப் பிடிக்காமற்போகும். அவரது பேச்சில் பக்குவம் இருக்காது. இவர்களது செயலில் நிதானம் இருக்காது.. இதனால் உறவுகள் இனிமையாய் இருக்காது. இது அதிகாரம் தொனிக்கும் நிலைமையைக் குறிக்கும். “தானே முக்கியமானவன்” – என்னும் தன்மை தொனிக்கும்.

இரண்டாம் சதுரம்: “நான் தோற்கிறேன் நீ வெல்ல” என்பதாகும். அதாவது, “நான் விட்டுக் கொடுக்கிறேன் நீ வெல்ல” – என்னும் மனோபாவத்தைக் குறிக்கும் சதுரமாகும். இப்படிப்பட்ட மனோபாவம் யாருக்கு வாய்க்கும் எனப் பார்த்தால் – யாரிடம் தைரியம் குறைவாகவும் கருணை அதிகமாகவும் இருக்குமோ – அவர்களால் மட்டுமே இப்படித் தன்னைத்தானே விட்டுக்கொடுத்து பிறர் வெல்ல – ஏதுவாக இருக்க முடியும். இது ஒருவரது பலவீனத்தைக் காட்டும் தன்மையாகும். இந்த நிலையில் உறவு ஆரம்பத்தில் இனிப்பது போலத் தோன்றினாலும், நாளாக ஆக, இப்படிப்பட்டவர்கள் புறக்கணிக்கப்படுவர். இவர்களின் மதிப்புக் குறைய நேரும். பிறகு யாருமே கவனிக்கவில்லை, எனக்கென்று யாருமில்லை, என்னால் முன்னேற முடியவில்லை எனப் புலம்ப நேரிடும்.

மேற்கண்ட இரண்டு சதுரங்களையும் சற்றே உற்று நோக்கினால் ஒரு விபரீதம் புரியும். உறவில் சம்பந்தப்பட்ட இருவருள் ஒருவர் – முதல் சதுரத்துக்குச் சொந்தக்காரராகவும், மற்றவர் இரண்டாம் சதுரத்திற்குச் சொந்தக்காரராகவும் இருந்தால் – நடப்பதை யூகித்துப் பாருங்கள்….. அவர், “நான் வெல்வேன்…. நீ தோற்பாய்” என்று களத்தில் இறங்குவார். இவர், “நான் தோற்பேன்…. நீ வெல்வாய்” என்று களத்தில் இருப்பார்.விளைவு என்னாகும்? எந்த வித சுவாரசியமும் இல்லாமல் ஒருவர் வெல்ல மற்றவர் தோற்றுக்கொண்டே இருப்பார். இது ஒருவித “ங்ஷ்ல்ப்ர்ண்ற்ஹற்ண்ர்ய்” – (துஷ்பிரயோக நிலைக்குச் சமமாகும்) மிகைப்படுத்துதலுக்குச் சமம்.

மூன்றாவது சதுரம்: “நானும் தோற்பேன் நீயும் தோற்க வேண்டும்” – என்னும் மிகவும் மோசமான மனோபாவத்தைக் குறிக்கிறது. “தனக்கு இரண்டு கண்களும் போனாலும் பரவாயில்லை. அடுத்தவனுக்கு ஒரு கண்ணாவது போக வேண்டும்” – என்னும் பழிவாங்கும் மனோநிலையைக் குறிக்கிறது.

இந்த நிலையை யார் அடைவர் என்றால், இந்த உறவில் சம்பந்தப்பட்ட இருவரும் சதுரம் – 1ல் கூறப்பட்டிருக்கும் “நான் வெல்வேன் நீ தோற்கவேண்டும்” என்னும் நிலையில் இயங்குபவராய் இருப்பர். இறுதியில் இருவருமே தோற்றுப்போகக் கூடும். இவர்களிடம் ஆணவமும், அதிகாரமும், ஆதிக்க மனோபாவமும் மிகுந்து காணப்படும். இவர்களைப் பொறுத்தவரை – எதிரியின் தோல்வியே முக்கியமானது. இவர்களின் தோல்வி என்பது வெகு சாதாரணமாகிப் போகும். இந்த நிலையின் கொடுமையைக் கொஞ்சம் யூகித்துப் பாருங்கள்… இந்த நிலை தேவையா என்று எண்ணிப்பாருங்கள்.

நான்காவது சதுரமானது: “நானும் வெல்வேன் நீயும் வெல்வாய்”-என்னும் ஒருவருக்கொருவர் உறுதுணையாய் இருக்கும் உன்னதமான உறவுநிலை. இந்நிலை – ஒத்துழைப்பு நிலையைக் குறிப்பதாகும். இந்நிலை வாழ்வை ஒரு போட்டியாகக் கருதாமல், உடன்பாடாகவும், கூட்டுறவாகவும் கருதும் நிலையாகும். மேற்கண்ட மற்ற நிலைகளெல்லாம் அந்தஸ்து மற்றும் அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டவையாகும். ஆனால் இந்த நிலை “எல்லோர்க்கும் எல்லாமும் பொது” என்னும் பரந்த மனப்பான்மையின் அடிப்படையிலமைந்த பொது உடைமையைக் குறிக்கும் நிலையாகும்.

ஒருவர் வெற்றிபெற வேண்டுமானால் மற்றவர் தோற்றாக வேண்டும் என்னும் எண்ணமற்ற நிலை இது. இது உனது வழியோ எனது வழியோ அல்ல. “இது நமது வழி” என்னும் சமத்துவத்தை சகோதரத்துவத்தை நிலைநாட்டும் உன்னத நிலை!

கூடிவாழ்தல் என்பது சமூக நிலையில் உயர்ந்த நிலை. யாரையும் சார்ந்து வாழும் அடிமை நிலையிலிருந்து விடுபட்டு – இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து, ஒருவரின் திறமையை ஒருவர் மதித்து ஏற்றுக்கொண்டு, வாழ்க்கையையோ வர்த்தகத்தையோ இணைந்து நடத்தும் மகத்தான நிலை. இந்நிலையில் ஈடுபட்டிருக்கும் யார்க்கும் ஆனந்தமே மிஞ்சும்.

இவர்களுக்கு தைரியமும் அதிகமாய் இருக்கும். கருணையும் அதிகமாய் காணப்படும். இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்படாது. இவர்களின் மனம் பக்குவப்பட்டதாய் இருக்கும். ஒருவரால் எப்பொழுது, தனது உணர்வுகளையும், எண்ணங்களையும் தைரியமாக வெளிப்படுத்தும் அதே நேரத்தில் பிறரின் உணர்வுகளையும், மன உறுதியையும் கேட்டுப்புரிந்து கொள்ளும் கருணை உணர்வும் கொண்டிருந்தால் அதுவே பக்குவநிலை எனப்படும். அதுவே மிக உயர்ந்த நிலையும் ஆகும்.

இதில் காணப்படும் “தைரியம்” – என்பது பொன்முட்டைக்கு உத்திரவாதம் தருவதெனினும், “கருணை” – என்பது தொலைநோக்குப் பார்வையில், சம்பந்தப்பட்ட அனைவருக்குமான வளத்துக்கும் வழிவகுக்கும் குணமாகும். இந்த இரண்டின் அடிப்படையில் அமையும் தலைமையானது – அனைவரின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்தவல்லது என்பதில் ஐயமேதுமில்லை.

ஆகவே நாமெல்லோருமே “நானும் வெல்வேன் நீயும் வெல்வாய்” – என்னும் பொது வெற்றியை நோக்கிப் புறப்படுவோம். விரைவில் நம் தேசத்தை வல்லரசாக்கும் இந்த வழியில் நடந்து நம் கனவை நாமே நனவாக்குவோம்.

தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *