பணத்தின் அருமையை உணர்த்துவது எப்படி ?

posted in: தொடர்கள் | 0

– ஸ்வாமி தேவ ஜோதிர்மய

நீங்கள் பணக்கார அப்பாவா ஏழை அப்பாவா?

சென்னை சென்ட்ரலிலிருந்து வெளியே வரும்போது அங்கே நான் கண்ட சம்பவம் எனக்கு சில பாடங்களை கற்றுத்தந்தது.

அந்த அதிகாலை நேரத்தில் சென்ட்ரலில் இருந்து வெளியே வந்த அனைவரையும் ஆட்டோகாரர்கள் மொய்த்துக்கொண்டார்கள், “எங்க சார் போகணும் ?” என்றவரிடம் ‘எக்மோர்’ என்றார் தன் மகனுடன் வந்திருந்த ஒரு அப்பா. இருவரின் கைகளிலிருந்த பெட்டிகளை  டிரைவர் வாங்கி ஆட்டோவில் வைத்தார். வண்டி கிளம்பியது.

அதே சென்ட்ரலில் அதே நேரத்தில் இன்னொரு அப்பாவும் தன் மகனோடு வெளியே வருகிறார். அவரையும் ஆட்டோ டிரைவர்கள் சூழ்ந்து கொள்கிறார்கள். “எங்க சார் போகணும் ?” யாருக்கும் பதில் சொல்லாமல் கூட்டத்தை கடக்கிறார். பையன் சொல்கிறான், “அப்பா, இப்ப பஸ் இருக்காது. ஆட்டோலயே போயிடலாம்.” “அங்க வாடகை அதிகமாக சொல்வாங்க” என்றவாறே அவன் அப்பா, தனியாக நிற்கும் ஆட்டோ டிரைவரிடம் ரேட் விசாரிக்கிறார். அதில் அவருக்கு திருப்தியில்லை.

பிறகு ப்ரீ பெய்டு ஆட்டோ நிறுத்தத்திற்கு செல்கிறார். ஒரு டிரைவர் அவரை நெருங்கி, “சார் டோக்கன் போட்டு 50 ரூபாய் வாங்குவாங்க. அதே அமெண்ட் கொடுங்க” என்று அழைக்கிறார். அவர் காதில் வாங்காமல் முன்னதாக பணம் செலுத்தி ப்ரீ பெய்ட் ஆட்டோ பெறும் கவுண்டருக்குள் நுழைந்து எக்மோருக்கு ஆட்டோவுக்கு பணம் செலுத்துகிறார். முப்பதே ரூபாய்தான். ஆட்டோ வருகிறது. இவர்களை ஏற்றிக்கொண்டு வண்டி கிளம்பியது.

இரண்டு அப்பாக்களும் தங்கள் குழந்தைகளோடு எக்மோருக்குத்தான் செல்கிறார்கள். ஆனால் இரண்டு குழந்தைகளும் வெவ்வேறு பாடங்களோடு செல்கிறது.

எவ்வளவு என்று கேட்காமல் ஏறுகிறவர்களுக்கு ஒரு விலை. உஷாராக நின்று கொண்டு நீ ரேட் சொன்னால்தான் ஏறுவேன் என்று நிற்கிறவர்களுக்கு ஒரு விலை என்பதை எல்லா ஆட்டோகாரர்களும் நியமித்தே வைத்திருக்கிறார்கள்.

ரேட் பேசாமல் ஆட்டோவில் ஏறி இறங்கியவுடன் கேட்ட பணத்தை கொடுக்கும் தந்தையிடம் இருந்து அதே வாழ்க்கை முறையை குழந்தையும் கற்றுக்கொள்கிறது. எந்த இடத்தில் ரேட் கூட சொல்வார்கள், எந்த இடத்தில் ரேட் குறைவாக சொல்வார்கள். ஸ்டாண்டில் இருந்து கிளம்புகிற ஆட்டோவைவிட பயணிகளை இறக்கி விட்டு ரிட்டன் செல்கிற ஆட்டோவில் ரேட் குறைவு. அதைவிடவும் அரசே நிர்ணயித்துள்ள தொகையை மட்டுமே பெற்றுக்கொண்டு வருகிற ப்ரீ பெய்டு ஆட்டோ ரேட்  அதைவிடவும் குறைவு என்ற பாடத்தையும் தந்தையிடம் இருந்துதான் இன்னொரு குழந்தை பெறுகிறது.

பணத்தை அலட்சியமாக செலவு செய்வதல்ல பணக்காரத்தனம். அதை பக்குவமாய் செலவு செய்வதுதான் மிகச்சிறந்த பணக்காரத் தனம்.

இந்த மாத ஹோம் ஒர்க்

நிறையப் பணம் இருந்தால் பணக்கார அப்பா. இல்லையென்றால் ஏழை அப்பா என்றெல்லாம் நான் நினைக்கவில்லை. அவசியம் செய்ய வேண்டிய செலவுக்கு வருத்தப்படாமல் செலவு செய்தால் நீங்கள் பணக்கார அப்பா. அத்தியாவசிய செலவுக்கே கூட, பணம் செலவாகிறதே என்று வருத்தப்பட்டு செய்தால் நீங்கள் ஏழை அப்பா.

இந்த மாதம் முழுக்க உங்களின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கண்காணியுங்கள். பிறகு கண்டுபிடியுங்கள். நீங்கள் பணக்கார அப்பாவா ? ஏழை அப்பாவா ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *