வேலைச்சுமையால் வாடுகிறீர்களா

– மதிவாணன்

அடுத்த நாளின் டைரியை முதல்நாளே எழுதுவது,
முன்னேற்றப் பாதையில் ஒரு முக்கியத் திருப்புமுனை.

பலபேருக்கும் வேலை, ஒரு பொதிபோல் வந்து விழுகிறது. அவர்களுடைய சொந்த வேலைகள்,

அவர்களை நோக்கி வந்த வேலைகள், அனாவசியமாய் பிறர் தந்த வேலைகள் இப்படி எல்லாத் திசைகளில் இருந்தும் வந்துகொண்டேயிருக்கிற வேலைகளால் இயல்பாகச் செய்ய வேண்டிய வேலைகள்கூட இமாலயப் பணிகளாய் தோற்றமளிக்கின்றன.

“என்னுடைய முகராசி! எல்லாரும் எல்லா வேலைகளையும் என்னிடமே தருகிறார்கள்” என்றொரு ஜோதிடரிடம் கேட்கப் போனார் ஒருவர். “உங்கள் முகராசி அப்படித்தான்! அதற்கு பரிகாரம் உண்டு. அடுத்த வாரம் வாங்க! இப்ப போகிறபோது அப்படியே என் டெலிபோன் பில்லைக் கட்டிடுங்களேன்… ப்ளீஸ்!” என்று தன் பங்குக்கு இன்னொரு வேலையைத் தந்தார் ஜோதிடர்.

அதிகமான வேலைப்பளு சுமப்பதை முகராசி என்பதை விடவும் “தலைராசி” என்று சொல்வதே பொருத்தம். வேண்டாத வேலை வழங்கப்படும்போது, தலையை இடதும் வலதுமாய் ஆட்டாமல் மேலும் கீழுமாய் ஆட்டி வைப்பதால் வரும் ஆபத்து இது.

அளவுக்கதிகமான வேலையை செய்வதால் ஒன்று அதிவிரைவில் சோர்வடைவீர்கள். அல்லது அரைகுறையாய்ச் செய்து அவப்பெருக்கு ஆளாவீர்கள்.
குடும்பத்துடன் சாப்பிடப் போகிறபோது கூட, தரவாரியாய் சிலவற்றை தேர்ந்தெடுக்கிறோம். முதல் விருப்பம், இந்த உணவகம். இல்லை யென்றால் அது. இரண்டிலும் இடமில்லை யென்றால் மூன்றாவது. இது போலவே வேலைகளையும் அவற்றின் முக்கியத்துவம், அவசரம், ஆதாயம் போன்ற அளவுகோல்களால் வகை பிரித்துப் பழகுங்கள். இதுவே, வேண்டியது வேண்டாதது என்று தேர்ந்தெடுக்கும் முன்பே முடிவெடுக்க உதவும்.

ஒரு மனிதருக்கு, தனிமனித நிலையில் – உறவுகள் சார்ந்து – வேலைகள் சார்ந்து என்று வெவ்வேறு கடமைகள் இருக்கத்தான் செய்யும். அவற்றில் அவசியமானவற்றை தேர்ந்தெடுத்துப் பழகுங்கள். உதாரணமாக, உங்கள் தம்பி மனைவியின் தங்கையின் நாத்தனாருக்கு நடக்கிற வளைகாப்பு வைபவத்துக்காக நீங்கள் அரை நாள் விடுமுறை எடுத்துக்கொண்டு பாரி முனையிலிருந்து பள்ளிக்கரணை போக வேண்டிய அவசியமில்லை.

குடும்பத்துடன் கலந்துகொள்ள வேண்டிய விசேஷங்கள், குடும்பத்திலிருந்து யாரேனும் ஒருவர் சென்றுவர வேண்டிய விசேஷங்கள் என்று பகுத்துக் கொள்வதும் பலன் கொடுக்கும். செயல் திறன் உச்சத்துக்கு வரும் நேரம் எதுவென்று உங்களையே கேளுங்கள். ஒரு நாளில் உஷ்ண வெளிப்பாடு உச்சத்துக்கு வருகிற நேரம், மதியம் மூன்று மணி என்கிறார்கள். உங்கள் செயலாற்றல் சிறந்து விளங்குகிற நேரத்தை கணித்து, அதி முக்கியமான வேலைகளை அந்த நேரங்களில் வைத்துக் கொள்ளலாம்.

மனதை இலகுவாக்கிக் கொள்ளவென்று, சில பொழுதுபோக்குகள், சில சந்தோஷமான நிமிஷங்கள் அவசியம். அவை ஆக்கப்பூர்வமாய் இருக்கிறதா என்று பாருங்கள். அதற்கென ஒதுக்கிய நேரம் முடிவடைகிறபோது நீங்கள் உற்சாகமாய் இருக்கிறீர்களா, உள்ள உற்சாகத்தையும் இழந்து சோர்வடைகிறீர்களா என்று பாருங்கள்.

மறுநாள் செய்து முடிக்க வேண்டிய வேலைகள் பற்றி முதல்நாளே ஒரு பட்டியல் போடுங்கள். ஒரு நாளில் நடந்து முடிந்த சம்பவங்களை எழுத ஒரு டைரியும், அடுத்த நாளை முன் கூட்டியே திட்டமிட இன்னொரு டைரியும் வைத்துக் கொள்ளுங்கள். அடுத்த நாளின் டைரியை முதல்நாளே எழுதுவது, முன்னேற்றப் பாதையில் ஒரு முக்கியத் திருப்புமுனை.

நாம் செய்ய வேண்டிய எல்லா வேலைகளையும் நாமே முடிவெடுப்பது நல்லது. ஒரு வேளை, அதற்கான சூழல் அமையவில்லை யென்றால், நாம் செய்ய வேண்டிய வேலைகளும் அதற்காக ஒதுக்குகிற நேரமும் நம்முடைய கட்டுப்பாட்டிலாவது இருப்பது அவசியம். வேலைகளைத் திட்டமிடுவதில் இருக்கிறது, வெற்றியின் ரகசியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *