அறிய வேண்டிய ஆளுமைகள்

கொலம்பஸ்: மிதந்து திரிந்த பறவை

பிறந்தார் என்று தெரியும். ஆகஸ்ட் 26 ஆ அக்டோபர் 31 ஆ என்று சர்ச்சை. அமெரிக்காவைக் கண்டறிந்தார் என்று தெரியும். கண்டறிந்த முதல் ஐரோப்பியரா இல்லையா என்பதில் சர்ச்சை. இப்படி, சர்ச்சைகளின் நாயகனாகவே சரித்திரத்தில் சித்தரிக்கப்படுபவர்தான் கிறிஸ்டோஃபர் கொலம்பஸ்.

இத்தாலியிலுள்ள ஜெனோவாவில் பிறந்த கொலம்பஸ்ஸின் தந்தை டொமினிகோ கொலம்போ, உல்லன் வியாபாரி. அவருடைய அம்மாவும் உல்லன் வியாபாரி ஒருவரின் மகள்தான். கொலம்பஸ் முறை சார்ந்த கல்வியில் பெரிதாக ஈடுபடவில்லை. ஆனால் எப்போதும் படித்துக் கொண்டேயிருப்பார்.

பத்தொன்பது வயதில் முதல் கப்பல் பயணம் மேற்கொண்டு, கியாஸ் தீவில் இறங்கிய கொலம்பஸ் அங்கேயே சில மாதங்கள் கழித்தார்.

இரண்டாவது பயணம் அவருக்கு இறக்கும் வரைக்கும் மறக்க முடியாததாய் இருக்கும். 1476ல், அட்லாண்டிக் கடலில் பயணம் செய்துபோது ஏற்பட்ட மோதலில் அவர் கப்பல் தீப்பிடித்து எரிந்தது. ஆறுமைல் தூரம் நீந்திக் கரை சேர்ந்தார் கொலம்பஸ்.

சைக்கிளில் இருந்து கீழே விழுந்தால் ஜென்மத்துக்கும் சைக்கிளையே தொடாதவர்கள் பலர். ஆனால், கொலம்பஸ் அப்படியில்லை. வணிக நிமித்தமாய் பலமுறை கடல் பயணம் மேற் கொண்டார்.

கொலம்பஸ்க்குக் கல்யாணம் ஆகும்முன்பே அவரது மாமனார் இறந்திருந்தார். ஆனாலும் இப்படியொரு மாப்பிள்ளை வருவார் என்று அவருக்கு முன்னரே தெரியும் போலும்!! மாமனார் வீட்டுச் சீதனமாய் கொலம்பசுக்குக் கிடைத்தது. அட்லாண்டிக் கடலின் காற்று வீசும் திசை, துள்ளலைகள் தொடர்பான விரிவான வரைபடங்களும் பட்டியலும்!

பட்டு மற்றும் வாசனைப் பொருட்கள் வணிகத்துக்காக ஐரோப்பா கடல் வழியாக சீன மற்றும் இந்தியாவுக்கான பயண வரைபடத்தை வகுத்தது. அதற்கு மாற்று வரைபடத்தை கொலம்பஸ் உருவாக்கியிருந்தார். அரசின் அங்கீகாரத்துக்காக அடம் பிடித்துக் கொண்டிருந்தார்.

போர்த்துகீசிய அரசவையில் அவர்தன் திட்டத்தை சமர்ப்பித்து அங்கீகாரம் கேட்டபோது, அவர் தலையை சுற்றி மூக்கைத் தொட முயற்சிப்பதாய் எல்லோரும் கேலி செய்தார்கள். பிறகு ஸ்பெயின் அரசவையில் திட்டத்தை சமர்ப்பித்தார். இந்த யோசனையை கொலம்பஸ் வேறெங்கும் விற்றுவிடக் கூடாது என்பதற்காக அவரை ஸ்பானிஷ் அரசு சம்பளம் கொடுத்து வெட்டியாய் உட்கார வைத்துக் கொண்டிருந்தது.

அதன்பின், போதிய நிதியுதவிகள் வந்தபிறகு 1492 ஆகஸ்ட் 3ல் தன் பயணத்தைத் தொடங்கினார். கேனரி தீவில் கொஞ்ச காலம் தங்கி, தனக்கும் கப்பலுக்கும் ரிப்பேர் எல்லாம் சரி செய்து கொண்டு செப்டம்பர் 6ல் கடல் கிழித்துக் கிளம்பினார்.

அவர் தூரத்தைக் கணக்குப் பண்ணி குழுவினருக்கு சொல்வதற்குள் கண்கள் பிதுங்கி விடும். உடன்வந்த மாலுமிகளுக்கு ஊர் ஞாபகமும், ஊர் திரும்புவோமா என்ற கலக்கமும் பிறந்ததால் கலகம் எழுந்து எழுந்து அடங்கியது.

65 நாட்களுக்குப் பின் 1492 அக்டோபர் 7ம் தேதி, பறவைகள் பறப்பது தெரிந்தது. அந்தத் திசை நோக்கி கப்பலைக் செலுத்த, கொலம்பஸ் கரை சேர்ந்தால் அந்த இடம் சமானாகே என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

1493 ஜனவரி 4 ஊர் திரும்ப நினைத்துப் புறப்பட்ட கொலம்பஸ், காற்றோடு போராடி, அந்த நூற்றாண்டின் மிக மோசமான புயலோடு தடுமாறி போர்த்துகீசிய நாட்டில் கரை சேர்ந்தார். அதற்குள் புதிய நிலப்பரப்புகளை அவர் கண்டறிந்த செய்தி, புயலைவிட வேகமாய் ஐரோப்பாவில் பரவியது. போர்த்துகீசிய நாட்டில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட கொலம்பஸ், ஸ்பெயின் நாட்டில் ஒரு கதாநாயகராக கருதப் பட்டு வரவேற்கப்பட்டார்.

இரண்டாவது பயணத்தை அதே ஆண்டில் செப்டம்பர் 24ல் தொடங்கினார் கொலம்பஸ்.

இப்போது இவர் போனது தங்க வேட்டைக்கு. புதிய பிரதேசங்களைக் கண்டறியும் ஆர்வத்தில் இவர் ஓர் ஆளுமையாக நிமிர்ந்தால் கூட பல நாடுகளில் வாழும் பழங்குடியினரை அடிமைப்படுத்தியது இவரது வாழ்வில் ஒரு கறுப்புப் புள்ளிதான். தங்கத்துக்கும் அங்கத்துக்குமாய் அடிமைகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டனர்.

இப்போது கொலம்பஸ் தன் ஆளுமைக்குள் இருப்பவர்களே அஞ்சக் கூடியவராக விளங்கினார். தன் ஆணை களைக் கேளாத மாலுமிகளை தூக்கில் போட்டார்.

அவரைத் தலையில் வைத்துக் கொண்டாடிய ஸ்பெயின் அரசாங்கமே 1500இல் அவரைக் கைது செய்தது. அதற்குள் போர்த்துகீசிய பயணப் பறவையாகிய வாஸ்கோடா காமா இந்தியா வந்து திரும்பியிருந்தார்.

அரசோடு மோதி, கைப்பற்றிய நாடுகளின் வருமானத்தில் பங்கு கேட்டுக் கொண்டிருந்த கொலம்பஸ் 1506 மே 20ம் தேதி ஸ்பெயின் நாட்டில் இறந்தார்.

புதிய நிலங்களைக் கண்டறிந்த கொலம்பஸ்ஸின் சடலம் புதைக்கப் பட்ட இடத்தைக்கூட கண்டறிய முடியாத அளவு, சாவிலும் அவர் சர்ச்சை நாயகராகவே இருந்தார்.

==மண்ணின் மீது மனிதனுக்காசை

மனிதன் மீது மண்ணுக்காசை

மண்தான் கடைசியில் ஜெயிக்கிறது – இதை

மனம்தான் உணர மறுக்கிறது++ என்ற கவிஞர் வைரமுத்துவின் வரிகள் கொலம்பஸ்ஸை நமக்கு நினைவூட்டுகின்றன.

வானளவு வளர்ந்தாலும் வேண்டாத நடவடிக்கைகளால் விழுந்த கொலம்பஸ் ஒரு விதத்தில் நம்பிக்கை. இன்னொரு விதத்தில் எச்சரிக்கை!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *