ஓர் அன்னையின் கனவு

– சுகி சிவம்

அப்போது காயத்ரிக்கு வயது மூன்று அல்லது நான்கிருக்கும். அழைப்பு மணி அடித்தது. பிஞ்சுக் கைகளால் கதவைத் திறந்த பிள்ளை திரும்ப உள்ளே வந்தபோது, யார் மணியடித்தது என்று கேட்டார் அப்பாயி. ‘போஸ்ட்மேன்’ என்று ஒற்றைச் சொல்லில் பதில் வந்தது. உடனே ஓர் அறை விழுந்தது அந்தக் குழந்தைக்கு. போஸ்ட்மேன் அண்ணா என்று சொல்லிப் பழகு என்று சொல்லிக் கொடுத்தார் பாட்டி.

இன்று திருமணமாகிப் போனபிறகும் காயத்ரி தன் வீட்டில் பணிபுரிபவர் உட்பட எல்லோருக்கும் அவர்கள் வயதுக்கு மரியாதை கொடுத்து அழைக்கிற பழக்கத்தைக் கொண்டிருக்கிறார்.”

அன்றைக்கு அப்பாயி கனகவல்லி அடி கொடுக்கவில்லை. அடிமேல் அடி வைத்து வாழ்வில் நடக்க தன் அடுத்தடுத்த தலைமுறைகளை நடை பயிற்றுவித்திருக்கிறார்.

அவர்களது வாழ்வின் வெற்றியை வார்த்தைகளின் வெற்றியாக வடித்திருக்கிறார் கவிஞர் மரபின்மைந்தன் முத்தையா.

கங்கா… இந்தியாவின் கம்பீரத்திலிருந்து பாயும் இந்தியர்களின் கவுரவம். வற்றாத ஜீவநதி. வளமையின் தாய்ப்பால். அதேபோல் கங்கா மருத்துவமனை… கோவையின் கவுரவம். கொங்கு மண்ணின் கம்பீரம். கடமை உணர்ச்சி வெள்ளமாய் பாயும் மருத்துவ மகாநதி… அதன் உற்பத்தி ஸ்தானம்… கங்கோத்ரி… கனகவல்லி என்கிற கற்பக விருட்சம் என்பதை இந்தப் புத்தகம் சொல்லிப்போகிறது.

ஒவ்வொரு பிள்ளைக்கும் தன் தாய் பற்றி எடுத்துச் சொல்ல ஏழெட்டுப் பிறவிகள் தேவைப்படும். காரணம் அம்மா என்பது ஒரு சொல்லில் எழுதப்பட்ட ஒற்றைக் காவியம்.

அப்படியிருக்க, ஆர்வமிக்க மாணவர்களாய் மலர்ந்த டாக்டர் ராஜ சபாபதி, டாக்டர் ராஜசேகர் இருவரையும் ஆற்றல்மிக்க மருத்துவர்களாக உயர்த்திய ஒரு தாயின் இலட்சியக் கதை இது. ஒரு பொறுப்பு மிக்க குடும்பத் தலைவியின் கண்டிப்புக் கரைக்குள் பாயும் அன்பு வெள்ளம் பற்றிய அருமையான எழுத்தோவியம்.
சின்ன வயது முதல் கோழி வளர்த்து ஆடு வளர்த்துப் பழகிய மகுடஞ்சாவடியின் பேதைப்பெண், பிள்ளை வளர்ப்பையும் ஒரு லாபகரமான வியாபாரமாகச் செய்யும் தாயாகிவிடாமல், சமூகப் பொறுப்புமிக்க, அறிவும் அர்ப்பணிப்பும் உடைய, ஆயிரக் கணக்கானவர் வலியும் வேதனையும் மாற்றும் அற்புத ஆற்றல்மிக்க பிள்ளைகளாய் வளர்த்து, பெரிய மனிதராக்கிய சூட்சுமத்தைச் சொல்லும் சுவாரஸ்யமான முயற்சி இது. இந்தப்புத்தகம் படித்தால் நிறைய தாய்மார் களுக்குக் கொஞ்சம் குற்ற உணர்வு கூட உருவாகக்கூடும்.

மாயி என்ற மகத்தான பெண்மணியின் உன்னத உரையில் புதுப்பாதை கண்டிருக்கிறார் அம்மா கனகவல்லி… சொற் பொழிவுகள் வெறும் வார்த்தை களின் குப்பை அன்று. அது மனிதரை மடை மாற்றும் மகத்தான ஆயுதம் என்று நான் நம்புவதற்குக் கனகவல்லி அம்மையார் மாயியின் உரையால் மனம் மலர்ந்த நிகழ்ச்சி ஓர் அடையாளம்.

வாழ்க்கையின் எல்லா நிகழ்வுகளையும் சந்திக்க தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருக்கும் இராணுவம் போல் இருக்கிறார் இவர். வெளிநாட்டில் இருந்த கணவரைப் பார்க்க தானும் வெளிநாடு போகும்போது பிள்ளைகள் இங்கே எப்படி இருக்க வேண்டும் என்றும் தனக்கு ஏதாவது ஆகிவிட்டால் எவ்வாறு வாழ வேண்டும் என்றும் பாடம் நடத்தி இருக்கிறார். உறவுகளை மதிக்கவும் அதே சமயம் கணிக்கவும் பிள்ளை களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார்.

காரில் பிள்ளைகளோடு நெடுந்தொலை பயணித்தால் காலத்தைக் கொலை செய்யாமல் இருக்க சொல்ல வேண்டிய கதைகள் உட்பட தயாரித்துப் பயணித்திருக்கிறார். பள்ளி ஆசிரியர்கள்கூட பாடத்திட்டத்தை மதிக்காது இருந்திருக்கலாம். வாழ்க்கை ஆசிரியரான இவர் எங்கும் எதிலும் தயாரிப்புடன்தான் புறப்படுகிறார்.

“நாம் கஷ்டப்பட்ட மாதிரி பிள்ளைங்க கஷ்டப்படக்கூடாது” என்கிற சாத்தானின் வேதவாக்கியத்தைச் சொல்லி பிள்ளைகளைச் சோம்பேறிகளாக மன ஊனமுற்று பிறரைச் சார்ந்து வாழும் கோழைகளாக ஆக்கும் தாய்மார்கள் மத்தியில் கடன், வட்டி, சேமிப்பு, சிக்கனம், நாணயம், நேர்மை, சிரமம், மான அவமானம் எல்லாவற்றையுமே பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.

கல்லூரி படிக்கும் போதே கடன் விஷயமாக வங்கி மேலாளரிடம் கறாராகப் பேசும்படி பிள்ளை வளர்ப்பது பெரிய காரியம்தான். முத்தையா மொழியில் சிரமங்களிலிருந்து சிகரங்களில் பயணிக்க பிள்ளைகளைப் பழக்கிய பெரிய பெண்மணி இவர்.
இத்தனை அற்புதங்களையும் தலைக்கனம் இன்றி டாக்டர். சண்முகநாதனின் நிழலில் ஒதுங்கிய படியே நிதானம் தவறாது செய்திருப்பது அதிசயத்திலும் அதிசயம். வாங்கிய கடனுக்கும் வட்டிக்குமாக நோயாளிகளை இறுக்கிக் கொள்ளும் மருத்துவர்கள் மத்தியில் தீபாவளிக்கு மருத்துவமனையே காலியாக இருந்தாலும் பரவாயில்லை. நம் லாபத்தை விட நோயாளியின் குடும்ப மகிழ்ச்சி முக்கியம் என்று கொள்கையாளர் டாக்டர் சண்முகநாதன். அவரது வழியில் பிள்ளைகள்…. பலே….

சங்ககிரிக்கும் சேலத்துக்கும் நடுவிலுள்ள மகுடஞ்சாவடி… கனகவல்லி அம்மையாரின் சொந்த ஊர். அந்த ஊர் பண்பாடே அதிசயம் தருகிறது. வந்து போகும் வழிப்போக்கர் வாயும் வயிறும் குளிர வாசல் திண்ணையில் செம்பு நிறைய தண்ணீர்… தட்டு நிறைய வெற்றிலை…. தாராளமாய்…. ஏராளமாய்….. வைத்திருப்பார்களாம். அடடா… பண்பாடு மண்ணில் பிறந்து மனதில் நுழைந்து வளப்படுத்தி இருக்கிறது.

இந்தப் பெண்மணியின் கனவை ஒரு சுவை குன்றாத நாவலைப்போல அழகிய நடையில் தந்து அசத்தியிருக்கிறார் முத்தையா. அவரது எழுத்து, எழுத்தில் அணிவகுக்கும் கருத்து, அதன் மூலம் சமூகத்திற்கு அவர் செய்யும் உதவி யாவுமே சிறப்பானவை.

விரிந்து பரவும் கங்கா மருத்துவமனையைப் படம் பிடிக்கிறார். அதன் மூலம் நம் நெஞ்சில் இடம் பிடிக்கிறார். எடுத்தால் புத்தகத்தை நீங்கள் கீழே வைக்க முடியாது என்று அடம் பிடிக்கிறார். இதோ… அவர் எழுத்தாற்றலுக்கு ஒரு சிறு சான்று….

“ராஜ சபாபதி, ராஜசேகர் என்னும் இரு ராஜாளிப் பறவைகளின் சிறகுகள் மருத்துவமனை வானை அளந்துவர, இவர்களின் வழி காட்டுதலில் ஏராளமான மருத்துவ நிபுணர்கள் ஒரே அலைவரிசையில் ஒன்றுபட்டு நிற்கிறார்கள்.

கூட்டுக்குடும்பம் என்கிற இலக்கணத்திற்கு இலக்கியமாய் இவர்கள் குடும்பம் விளங்குவது போலவே கூட்டு முயற்சியின் இலக்கணமாய் வீட்டுக்கு வெளியிலுள்ள கூட்டுக் குடும்பமாய் கங்கா மருத்துவமனை திகழ்கிறது. மருத்துவர், செவிலியர், அலுவலர், ஊழியர் என்று அனைத்து தரப்பினர் இடையிலும் நிலவுகிற புரிதல், மருத்துவப்பணியின் கனவின் ஒவ்வொரு செயலிலும் எதிரொலிக்கிறது.

அவசர சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் வந்து நிற்கும்போது பக்கத்தில் ஒரு மருத்துவர் இருக்க நேர்ந்தால் அவர் பணியாளர் வரும் வரையில் பொறுப்பதில்லை. தானே ஸ்டிரெச்சரைத் தள்ளிக் கொண்டு வருவார். முன்பணம் கட்டுகிற வரை சிகிச்சை காத்திருப்பதில்லை. மருத்துவ மனைக்குள் கொண்டுவரப்பட்ட அடுத்த நிமிடத்தில் இருந்தே சிகிச்சை தொடங்குகிறது. இந்த அர்ப்பணிப்புணர்வுதான் கங்கா மருத்துவ மனையை சர்வதேச புகழ்மிக்க மருத்துவ மனையாகவும், மருத்துவ ஆய்வு மையமாகவும், நிலை நிறுத்தி இருக்கிறது”.

படித்து முடிக்கும்போது கம்பீரமான கனகவல்லி, கண்ணிய மிக்க டாக்டர். சண்முக நாதன் ராஜாளி பறவைகளாய் வானை அளக்கும் ராஜசபாபதி, ராஜசேகர் இவர்கள் முயற்சியால் பெருகியோடும் கங்கா மருத்துவ மனையின் சேவை வெள்ளம் இத்தனையையும் பேனா முனையில் அருவியாய்ப் பாயவிடும் முத்தையாவின் எழுத்து நடை, எதையும் என்னால் மறக்க முடியவில்லை. சுகமான அவசியமான முயற்சி முத்தையாவின் முயற்சி. என் நல்வாழ்த்துக்கள்.

  1. B.Sivakumar

    Dear Sir,

    I am interested to buy this book reviewed by Sugi Sivam.

    Please provide the publisher of this book Annaiyin Kanavu.

    Thanks and Regards

    Sivakumar.B.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *