முயற்சி வேண்டும்

– டாக்டர் கவிஞர் ராஜ்கவி

அசையாமல் நீயிருக்க
யோகியுமல்ல!
அப்படியே உட்காரப்
பாறையுமல்ல!
திசையாவும் திரிகின்ற
பறவையைப் பார் நீ!
திரிந்தலைய அதன்தேவை
கோடி செல்வமா?
விசைவேண்டும் நம்முடற்கு
வீணில் கிடப்பதா?
வேலையொன்றும் செய்யாமல்
சோம்பி இருப்பதா?

இரும்பு கூடத் தரைகிடந்தால்
துருப்பிடிக்குமாம்
விரும்பு எதையும் செய்ய விரும்பு
விடிவு காணலாம்
வேலை யாவும் சுமைக ளல்ல
சுகமும் காணலாம்.
கரும்பு போல வாழ்வை மாற்றக்
கடமை யாற்றுவாய்!
காலநேரம் பார்த்தி டாமல்
உழைப்பில் மூழ்குவாய்.

தண்ணீரில் சிறகடித்தால்
அலையில் மிதக்கலாம்
தரையிருந்து சிறகசைத்தால்
காற்றில் மிதக்கலாம்.
நிலவிலிருந்து சிறகடித்தால்
அண்டம் கடக்கலாம்
எதிலும் முயற்சிவேண்டுமென்ற
எண்ணம் வேண்டுமே!
அந்த முயற்சி விதியை மாற்றும்
உயர்வு திண்ணமே!

முன்னேற்றம்

முன்னேறு! முன்னேறு! மேலும் மேலும் முன்னேறு! மற்றவர்கள் நீ முன்னேறுவதைக் கவனிக்கிறார்களா என்பதைக் காண்பதற்காக நீ திரும்பிப் பார்த்துக் கொண்டிருக்காதே. முன்னேறுவதிலேயே கவனமாக இரு.
-மார்க்கஸ் அரேலியர்

முன்னேறும் மனிதன் துறுதுறுப்பு உள்ள மனிதனாக இருக்கிறான். ஏன்? எப்படி? என்று எல்லாவற்றைப் பற்றியும் தெரிந்து கொள்ள விரும்புகிறான். எப்படிச் செய்யப்பட்டிருக்கிறது? யார் செய்தது? எப்படி வேலை செய்கிறது என்று விசாரிக்கிறான். புதிய துறைகள், புதிய விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்கிறான். புதிய திறமைகளை சம்பாதித்துக் கொள்வதிலும், புதிய மனிதர்களை சந்திப்பதிலும், புதிய இடங்களைப் பார்ப்பதிலும் ஆவல் உள்ளவனாக இருக்கிறான்.
– கார் கோயலர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *