– மகேஷ்வரி சற்குரு
” ஆடு மேய்ச்சமாதிரியும் ஆச்சு! அண்ணனுக்குப் பொண்ணு பார்த்த மாதிரியும்… ஆச்சு!” இது கிராமத்தில் கேட்கின்ற வழக்கமான வாக்கியம். ஒரு நேரத்தில் ஒரு வேலைதானே செய்யமுடியும். இது எப்படி? என்று நினைக்கத் தோன்றும். இது நேரத்தின் முக்கியத்துவத்தை சொல்லித் தருகின்ற கிராமத்தின் நேர்த்தி.
கோவையிலிருந்து பழனிக்கு ஒரு வேலை நிமித்தம் செல்கின்ற ஒருவருக்கு பொள்ளாச்சியில் வேறு ஒரு வேலை இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அவர் பழனிக்குப் போகின்ற போதோ அல்லது பழனியிலிருந்து திரும்பும் போதோ அந்த வேலையை முடிக்க வேண்டும். அதற்கான நேரத்தை அவர்தான் சரிசெய்து வைத்துக்கொள்ள வேண்டும். அதைவிட்டு விட்டு கோவைக்கு வந்துவிட்டு மீண்டும் பொள்ளாச்சி சென்றால் அது வேண்டாத வேலைதான். பல நேரங்களில் இப்படிச் செய்துவிட்டு, திருவிழாவில் காணாமல் போன குழந்தைமாதிரி =திரு திரு’ என்று விழிக்கின்றவர் பலபேர் நம்மிடையே உண்டு.
வளரும் சிகரங்கள் அமைப்பில் குழந்தைகளுக்கிடையே நடைபெற்ற ஓர் ஓவிய அரங்கில் ஒரு குழந்தை மீன் வரைந்திருந்தது. அருகிலிருந்த மற்றொரு குழந்தை சொன்னது, ”இந்த மீன் நீந்துவது மாதிரி இல்லை. பறக்கிற மாதிரி இருக்கு! அப்படின்னா இது என்ன மீன் தெரியுமா? விண்மீன்!!” ஆற்றுமீனை விண்மீனாக மாற்ற பள்ளிக்குழந்தைக்கு தெரிந்திருக்கிறது என்றால் நமக்கு மீன்பிடிக்க அல்லவா தெரிந்திருக்க வேண்டும்!
நல்ல தொழிலை லாபத்துடன் செய்து கொண்டே அந்த தொழில் சார்ந்த உபரி தொழில்களையும் செய்து தொழில் வல்லுனர் ஆவது புத்திசாலித்தனம். மீன் கொத்திப் பறவைகளையும் கொக்கையும் ஒப்பிட்டுப் பாருங்களேன். =ஓடுமீன் ஓட உறுமீன் வரும் வரை’ ஒற்றைக்காலில் நின்றுகொண்டு நேரத்தை வீணடிக்கும் கொக்கு. ஆனால் ஓடுகின்ற ஆற்றின்மேல் லாவகமாய் பறந்து கொண்டே ஆற்றில் துள்ளிக் குதிக்கின்ற மீனை டக்கென்று பிடித்துக்கொண்டு மீண்டும் பறக்கின்ற மீன் கொத்திப்பறவை. இதில் எது சரி? பறந்து கொண்டே மீன் பிடிப்பதுதானே!
எதிரில் நிற்பவர் எல்லாம் என் உறவினர். நான் போர் செய்ய மாட்டேன் என்று சும்மா நின்ற அர்ஜுனனுக்கு உபதேசம் செய்து உலகிற்கு கீதையை தரமுடிந்தது கிருஷ்ணனால். எப்படி? போதி மரத்தடியில் அல்ல! ஐந்து குதிரைகளின் கடிவாளம் ஒரு கையில்! நிற்கின்ற இடமோ போர்க்களம்! மனதளவில் பலமுனைத் தாக்குதல். என்ன தான் கடவுள் என்று நாம் சொன்னாலும் (நினைத்தாலும்)கூட போர்க்களத்தில் கீதையைத் தர கிருஷ்ணனுக்கு தேவைப்பட்டது இரண்டு. 1) இன்று இது இப்பொழுது தேவை என்கின்ற மனம். 2) மிகச்சரியான ஒன்றை பதிவு செய்ய வேண்டும் என்கின்ற தெளிவு! இவை இரண்டும் போர்க்களத்திற்கு மட்டுமல்ல, வாழ்க்கைக் களத்திற்கும் தேவை.
ஒன்றிலிருந்து கொண்டு மற்றொன்றில் நிலைத்த தன்மை பெறுவதுதான் இன்றைய கால கட்டத்திற்கு தேவையான ஒன்று. மளிகைக்கு ஒரு கடை; காய்களுக்கு ஒரு கடை; பாத்திரங்களுக்கு ஒன்று; செருப்புக்கு ஒன்று; =நாவல்டீஸி’ற்கு ஒரு கடை; அழகு சாதனங்களுக்கு ஒரு கடை என்று அலைகின்றபோது அய்யோடா என்று இருந்த ”ஷாப்பிங்…” அனைத்தும் ஒரு கூரையின்கீழ் டிபார்ட்மெண்ட் ஸ்டோராக வந்தபோது பயனடைந்தது வாடிக்கையாளர், கடை முதலாளி, தொழிலாளி மூவரும்தான்.
முழு நேரமும் எல்.ஐ.சி. முகவராக இருக்கின்ற ஒருவர் கிடைக்கின்ற வேலை நேரத்தில் ரியல் எஸ்டேட் ஒரு கை என்று இருந்தார் என்றால் அவருக்கு லட்சுமி கடாட்சம் அமோகம் தான். ஏனெனில் இரண்டுக்கும் வாய் ஒன்றுதான் முதலீடு. வாய் இருந்தால் வருவாய்க்கு ஏது பஞ்சம். தனித்தனி நேரம் தேவையில்லை, தங்கள் பயனாளிகளைப் பார்க்க! ஒரே நேரத்தில் இரண்டு காரியமும் ஆகும். முதலில் தரம் வாரியாக பஞ்சை மட்டும் பிரிக்கின்ற நிறுவனம் பின்னாளில் பஞ்சிலிருந்து நூல்; நூலிலிருந்து தரம் வாரியான துணிகள். பின் சந்தைப்படுத்துவதற்குத் தயாரான நிலையில் ஆடைகள், அதன்பின் ஆயத்த ஆடைகள். அடுத்த கட்டமாக ஏற்றுமதி, நிறைவாக மக்களிடையே நேரடி சந்தைப்படுத்துதல். சந்தைப் படுத்துதலில் புதுப்புது உத்திகள்! இன்றைய பிரபல அனைத்து டெக்ஸ்டைல்ஸ் நிறுவனங்களும் இப்படித்தான்!
இதுதான் ஒன்றிலிருந்து கொண்டு இன்னொன்று! பறந்து கொண்டே மீன் பிடிக்கத் தேவை காட்சிப் பிரமாணமும் மற்றொன்று அனுமானப்பிரமாணமும். பார்க்கின்ற காட்சியை புரிந்துகொள்ள வேண்டும். எது இருக்கிறது என்று அனுமானிக்கத் தெரிய வேண்டும். புகை இருக்கின்றது என்றால் நெருப்பு இருக்கும் என்று அனுமானிக்கும் அறிவும், புரிதலும் இருந்தால் அந்த நெருப்பு நமக்கு பயன்படவும் செய்யும்.
செயல்திறனை வளர்த்துக் கொண்டால் சுற்றும்பூமி நம் கையில்தான். பறந்து கொண்டே மீன் என்ன? திமிங்கலமும் பிடிக்கலாம்…… !
Indu Manoharan
I am following namdadhu nambikkai regularly from Glasgow, UK. I enjoy reading books in general, but was always comfortable with english books over tamil. But now that an inspiring magazine like namdadhu nambikkai is available online, I find that it is quite a page-turner and also a good source for improving my tamil vocubulary. I especially follow, writers like Mrs. Maheswari Sarguru. Pl keep continuing online publication, I will recommend this to all my family & friends.
Indu Manoharan,
Glasgow, UK.