நமது பார்வை

வினையாகும் விளையாட்டு

அளவுக்கதிகமாய் செல்லம் கொடுக்கும் பிள்ளை கெட்டுப்போகும் என்பதை வீட்டுப் பெரியவர்கள் சொல்வதுண்டு. நாட்டுப் பெரியவர்கள் செல்லம் கொடுத்து கெடுத்த பிள்ளையாகிப் போனது கிரிக்கெட் விளையாட்டு.

அளவுக்கதிகமான பணம், விளம்பர வெளிச்சம், முக்கியத்துவம் எல்லாம் தரப்பட்டு தேசப்பற்றின் அடையாளமாகவே கிரிக்கெட் பார்ப்பது கருதப் பட்டு, கடைசியில் அதுவே ஊழலின் ஊற்றுக் கண்ணாக மாறிவிட்டது.

மத்திய மந்திரி பதவியிழப்பில் தொடங்கி, ஊழல் குற்றச்சாட்டுக்கள், குண்டு மிரட்டல்கள் என்று எவ்வளவோ சிக்கல்களை ஏற்படுத்தி விட்டது கண்மூடித்தனமான கிரிக்கெட் மோகம்.

தீவிரவாத மிரட்டல்கள் இருப்பதால் போட்டிகளை இடம் மாற்றுவதாகச் சொன்னதும், “பெங்களூரிலேயே வைத்துக் கொள்ளுங்கள்” என்று பதறுகிறார் எடியூரப்பா. அவசியம் நடத்தி முடிக்க அது என்ன அணிசேரா நாடுகளின் மாநாடா அல்லது காவிரிச் சிக்கலுக்கான தீர்வுக்களமா?

எல்லா விளையாட்டுக்களுக்கும் திறமை தேவைப்படுகிறது. எல்லா விளையாட்டுகளுக்கும் ஊக்குவிப்பு தேவைப்படுகிறது. கிரிக்கெட் விளையாட்டை மட்டும் மடிமீது வைத்து கொஞ்சி விட்டு மற்றவற்றை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தும் போக்கை தேசம் மாற்றிக் கொள்ள வேண்டும். விளையாட்டு வினையாகும்.

  1. M.J. SYED ABDULRAHMAN

    Super
    Cricket: Crazy Run Irritate Catch
    Good Wishes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *