பேசத்தான் ஆசை

இங்கிலாந்து போலீஸ், தீவிரவாதக் கும்பல் ஒன்றை சுற்றி வளைக்க முற்பட்டபோது தீவிரவாதிகள் தப்பித்தனர். அவர்களுடைய நாய் மட்டும் பிடிபட்டது. ஆச்சரியம் என்னவென்றால், தீவிரவாதக் கும்பல் போய் வரும் இடங்கள், ஒளிந்திருந்த இடங்கள், எல்லாமே அந்த நாய்க்கு நன்றாகத் தெரியும்.

வருத்தம் என்னவென்றால், அந்த தீவிரவாதக் கும்பல் பேசிய ஹீப்ரு மொழியில் கட்டளை பிறப்பித்தால்தான் அந்த நாய்க்குப் புரியும். கட்டளைக்குக் கீழ்படியும்.

ஹீப்ரு மொழி தெரிந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று தேடி இதழ்களில் விளம்பரங்கள் கொடுத்தது காவல்துறை. ஒரே ஒருவர் வந்தார். அவரை வரவேற்று உபசரித்த காவல்துறை தங்களுக்கு வேண்டிய விபரங்களை அவரிடம் சொல்ல, அவரும் நாய்க்குக் கட்டளைகள் பிறப்பித்தார். நாயும் அடிபணிந்தது. மிக முக்கியமான துப்புகள் துலங்கின.

அவருக்கு எவ்வளவு பணம் தரவேண்டும் என்று காவல்துறை அதிகாரிகளுக்குத் தெரியவில்லை. பத்தாயிரம் பவுண்ட் தருவது, மேலும் கேட்டால் பேரம் பேசுவது என்று முடிவெடுத்தார்கள். அவர்கள் பணம் தரும் முன்னரே அந்த மனிதர் பத்தாயிரம் பவுண்டுகளை எடுத்து காவல்துறைக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார். காரணம் கேட்டபோது சொன்னார்.
“ஏதோ ஓர் ஆசையால் ஹீப்ருமொழி படித்தேன். இந்த மொழியைக் கற்க நான் போனது என் மனைவிக்கு சுத்தமாய் பிடிக்கவில்லை. “இது வேண்டாத வேலை! இங்கிலாந்தில் நீ ஹீப்ரு மொழியில் பேசினால் ஒரு நாயும் கேட்காது” என்றாள். அதைப் பொய்யாக்கி என் மானத்தைக் காப்பாற்றினீர்களே! அதற்குத்தான்” என்றார் அந்த மனிதர். கற்றுக் கொண்டதை வெளிப்படுத்தினால்தானே மகிழ்ச்சி!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *