உளிகள் நிறைந்த உலகம் இது!

– மரபின் மைந்தன் ம. முத்தையா

அறிமுகங்கள்! அனுபவங்கள்! ஆளுமைகள்!

தொண்ணூறுகளின் தொடக்கம். காட்சி ஊடகங்களின் ஆட்சி தொடங்கிய காலம். தனியார் தொலைக்காட்சிகள் தலையெடுக்கத் தொடங்கிய நேரம். தொலைக்காட்சி விளம்பரங்களை உருவாக்கும் பணியிலும் பிஃப்த் எஸ்டேட் நிறுவனம் ஈடுபட்டது.

சசியில் இருந்தபோது, காட்சி ஊடகங்கள் மூலம் கவனம் ஈர்க்கும் விளம்பரங்களை உருவாக்குவதில் கைதேர்ந்தவரான சந்திரசேகர் துடிப்பும் துள்ளலுமாக பல வெற்றிகளைக் குவித்துக் கொண்டிருந்தார். நடிகை ஹீராவைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஏவிடி பிரீமியம் டீக்கான, ”பாத்தீங்களா! பாத்தீங்களா! கேட்டீங்களா! கேட்டீங்களா! சாப்டீங்களா? சாப்டீங்களா?” என்ற விளம்பரம் பெரும் புகழ் பெற்றது. அப்போது சசியில் சந்திரசேகருக்குத் துணையாய் பணிபுரிந்த அனுபவம் இருந்தது.

காட்சி விளம்பரங்களுக்கு வாடிக்கை யாளர்களின் ஒப்புதல் பெற்ற ஸ்டோரி போர்ட் தயார் செய்ய வேண்டும். ஒரு காகிதத்தை மேலிருந்து கீழாய் நேர்க்கோட்டில் இரண்டாகப் பிரித்துக்கொள்வோம். இடது புறம் விஷூவல் என்றும் வலதுபுறம் ஆடியோ என்றும் தலைப் பிட்டுக்கொள்வோம். இடதுபுறம் ஒன்றின்கீழ் ஒன்றாக காட்சி விவரங்களும் எதிர்புறம் அவற்றுக்கான விளம்பரப் பாடல் வரியோ, உரையாடலோ, அறிவிப்பு வாசகங்களோ இடம் பெற்றிருக்கும். காட்சிப்படிமம் காணப்படுகிறது என்கிற விழிப்புணர்வு, விளம்பர எழுத்தாளர் களுக்கு மிகவும் அவசியம். காட்சிகளுக்கான நேர்முக வர்ணனையாக விளம்பரங்கள் இருக்க வேண்டிய அவசியமில்லை. பழைய காலத் திரைப் படங்களில் நியூஸ் ரீல் காட்டுவார்கள். ஆறு சலசலத்து ஓடிக்கொண்டிருக்கும். ”இதுதான் ஆறு” என்பார் வர்ணனையாளர். பிறகு ஒரு பாலத்தைக் காட்டுவார்கள்.

அலுப்பூட்டும் இந்த வகைமைக்கொரு மாற்றாக வந்தவையே விளம்பரங்கள். இருபதே விநாடிகளில் ஒரு கதையைச் சொல்ல வேண்டும். இந்தக் கதை யாருக்கு சொல்லப்பட வேண்டுமோ, அவர்களை ஈர்க்கவேண்டும். இருபது விநாடிகளின் எல்லையில் பார்ப்பவர்களை அது செயல்படவும் தூண்ட வேண்டும்.

பிஃப்த் எஸ்டேட் நிறுவனத்தில் எனக்குத் தரப்பட்ட முதல் காட்சி விளம்பர வாய்ப்பு டால்மியா சிமெண்ட்டுக்கானது. ”தலைமுறைகள் எங்களுடன் நிலைத்து நிற்கும்” என்ற வாசகத்தில் மையங்கொண்டு, அதன் விளம்பரங்கள் வெளியாகிக் கொண்டிருந்தன.

ஒவ்வொரு விளம்பரத்துக்குமான தேவை என்ன, அந்த விளம்பரம் நிகழ்த்திக் காட்ட வேண்டியதென்ன என்றெல்லாம் அதற்குரிய அலுவலர் தருகிற விவரணைகளுக்கு ப்ரீஃப் என்று பெயர். (ஒரு முறை உள்ளாடை நிறுவனம் ஒன்றுக்கு விவரணைகள் வழங்கிய இளம் அலுவலர் ஒருவர், ”ப்ரீஃப் விக்கணும். அதுதான் ப்ரீஃப்” என்றார்)

டால்மியா சிமெண்ட் அப்போது 53 கிரேட் சிமெண்ட்டை அறிமுகம் செய்திருந்தது. 53 கிரேட் வகை சிமெண்ட் தமிழ்நாட்டில் எல்லா சிமெண்ட்டிலும் உண்டு. கேரளாவில் இல்லை. அந்த வகையில் கேரளாவை மையப்படுத்தும் விதத்தில் விளம்பரம் இருக்கவேண்டும். ஆனால் கேரளாவில் முதல் முறையாக என்பது போன்ற வாசகங்கள் கூடாது.

இதற்காக நான் ஒரு ஸ்டோரி போர்ட் உருவாக்கினேன். இருபது விநாடிகளில் பதினைந்து விநாடிகள் வெறும் இசை மட்டும்தான். காட்சியிலோ, கேரளக் கோயில்களின் மரபில் அலங்கரிக்கப்பட்ட யானைகள், செண்டை, பம்பை போன்ற வாத்தியங்கள் முழங்க வந்து ஒரு கட்டிடத்துக்குள் கலந்து காணாமல் போகும். கடைசி யானை கட்டிடத்துக்குள் சங்கமிக்கும் போது ஒரு குரல், ”உங்கள் கட்டிடங்களுக்குக் கொடுங்கள் யானை பலம். டால்மியா சிமெண்ட்” என்னும்.

வெளிப்படையாகக் கேரளாவை பற்றிப் பேசாமல் அதே நேரம் கேரளாவை நினைவூட்டுவதோடு, யானைபலம் என்னும் பொதுத்தன்மை வாய்ந்த கருத்துவாக்கத்தால் அந்த விளம்பரத்திற்கு டால்மியா சிமெண்ட் நிறுவனம் ஒப்புதல் அளித்தது.

இதன்பிறகு, தமிழகமெங்கும் உள்ள டால்மியா சிமெண்ட் டீலர்களைக் கூட்டி ஒரு பயிலரங்கை நிகழ்த்த டால்மியா சிமெண்ட் நிர்வாகத்தினர்கள் விரும்பினார்கள். ஒரு கட்டிடத்துக்கு எந்த சிமெண்ட் வாங்குவதென்று, யாரெல்லாம் முடிவு செய்யும் நிலையில் இருப்பார்கள், அவர்களை எவ்விதங்களில் எல்லாம் அணுகலாம் என்றெல்லாம் டீலர்களுக்கு விளக்க விரும்பினார்கள்.

ஒரு கட்டிடத்தின் ஆர்கிடெக்ட், என்ஜினியர், மேஸ்திரி, ஸ்டாக்கிஸ்ட் – இவர்கள் நால்வரும் தருகிற ஆலோசனையில்தான் சிமெண்ட் வாங்குவதில் முடிவு செய்கிறார்கள் என்று கள ஆய்வில் கண்டறிந்தார்கள்.

பெரிய நிறுவனங்களுக்கான விளம்பரங்களை உருவாக்குவதற்கு முன்னால் இத்தகைய கள ஆய்வுகள் மேற்கொள்ளப் படுவதுண்டு. விளம்பர உலகில் மிக முக்கிய ஆளுமையாக அறியப்பட்டவர் அலிக் பதம்ஸீ. புகழ்பெற்ற பல விளம்பரங்களை உருவாக்கியவர். லிரில் சோப் விளம்பரம் அவரால் உருவாக்கப் பட்டது.

ஒரு பெண், மலையருவியில் குறைந்த பட்ச ஆடைகளுடன் குளிக்கும் அந்த விளம்பரம் அதிக பட்ச விமர்சனங்களுக்கு ஆளானது. ஆனால் லிரில் சந்தையில் மாபெரும் வெற்றியைப் பெற்றது.

இதற்குக் காரணம், கள ஆய்வில் கண்டறியப் பட்ட சுவாரசியமான உளவியல் அம்சம் ஒன்று. அந்த விளம்பரத்தில் வெற்றிகரமாகப் பயன் படுத்தப்பட்டதுதான். அதிகாலை தொடங்கி பம்பரம் போல் பரபரப்பாக சுற்றுகிற பெண்கள், வீட்டுக்கடமைகள், அலுவலகக் கடமைகளுக்கு நடுவே தனக்கே தனக்கான பிரத்யேக நிமிடங்களாக உணர்வது, குளியலறையில் செலவிடும் அந்த சில நிமிஷங்களைத்தான் என்று அந்த ஆய்வில் கண்டறியப்பட்டது.

அதுபோல, சிமெண்ட் வாங்கும்போது அதைத் தீர்மானிக்கும் சக்திகளாக விளங்கும் ஆர்கிடெக்ட், என்ஜினியர், மேஸ்திரி, ஸ்டாக்கிஸ்ட் ஆகியோரை எந்த எந்த அம்சங்கள் கவரும் என்றும், அந்த அம்சங்கள் டால்மியா சிமெண்ட்டில் இடம் பெற்றிருக்கும் விதம் குறித்தும் விளக்குகிற செய்திப்படம் ஒன்றை சுவாரசியம் குறையாமல் உருவாக்க வேண்டும். அதற்கான மூலக்கருவை ராம்கி உருவாக்கினார். தமிழகத்தின் வெவ்வேறு மாவட்டங்களில் இருந்து வருகிற ஸ்டாக்கிஸ்டுகள் டால்மியாவின் வெற்றியில் சம்பந்தப்பட்டிருந்தார்கள். எனவே அந்தப் படத்தை சுவாரசியம் மிக்கதாக்குவதற்காக அந்த பட்ஜெட் படத்தில் கமலும் ரஜினியும் சம்பந்தப்பட்டார்கள்.

தொழில்நுட்பத் தகவல்கள் சார்ந்த செய்திப் படம் ஒன்றை சுவாரசியம் மிக்கதாக வேண்டுமென்றால் அதில் பிரபலங்களை சேர்க்கலாம் என்பது முதல்விதி. பிரபலங்களை சேர்க்கும் அளவு பட்ஜெட் இல்லையென்றால் பிரபலங்களின் சாயலில் உருவாக்கலாம் என்பது இரண்டாவது விதி. இதற்கு காபிரைட் விதிகளும் இடம் கொடுப்பதுதான் முக்கியமான விஷயம்.

கட்டிடத்திற்கு எந்த சிமெண்ட்டை பயன் படுத்தலாம் என்று தீர்மானிக்கும் சக்திகள் யார் யார் என்ற ஆய்வில் நான்குபேர் அந்த முடிவை எடுக்கிறார்கள் என்பதைச் சுற்றித்தான் செய்திப் படத்தின் கரு இயங்க வேண்டும். இதற்கு ராம்கி ஒரு திட்டத்தை வகுத்தார்.

அப்போதுதான் கமல்ஹாசனின் மைக்கேல் மதன காமராஜன் படம் வெளி வந்திருந்தது. ஒரே விளம்பரப் பாடலைக் கொண்டு நான்கு பாத்திரங்களை உருவாக்கினோம். ஆர்க்கிடெக்ட் மதன், என்ஜினியர் ராஜன், மேஸ்திரி மைக்கேல், ஸ்டாக்கிஸ்ட் காமேஸ்வரன். திரைப்படப் பாத்திரங்களின் வசன பாவங்களை இந்த நால்வரின் உரையாடல்களிலும் கொண்டு வந்திருந்தேன். எல்லாம் சரிதான். இதில் ரஜினி எங்கிருந்து வந்தார் என்கிறீர்களா? அந்த நால்வரையும் கொண்டு உருவாக்கப்படும் அடுக்கு மாடிக் கட்டிடத்தின் உரிமையாளர், தன்னை இவ்வாறு அறிமுகப்படுத்திக்கொள்வார். ”வணக்கங்க. நான்தான் மலை…. அண்ணாமலை! இந்த அடுக்குமாடிக் கட்டிடத்தோட எஜமான்… எப்டீ… எஜமான்!” இத்தனைக்கும் பிறகும் மைக்கேல் மதன காமராஜன் படத்துடன் முதல் சில நிமிடங்களிலேயே பார்வையாளர்கள் இந்த செய்திப்படத்தைத் தொடர்புபடுத்திக் கொண்டால்தான் ஈடுபாட்டுடன் பார்ப்பார்கள்.

எனவே, ‘கதகேளு கதகேளு’ என்று தொடங்கும் மைக்கேல் மதன காமராஜன் படத்தின் டைட்டில் பாடலைப் பயன்படுத்தத் தீர்மானித்தோம். ஒரு பாடலின் இசையை சில விநாடிகள் வரை அப்படியே பயன்படுத்திக் கொண்டால் காபிரைட் சட்டம் பாதிக்காது. எனவே அதே மெட்டுக்கு புதிய வரிகளை எழுதினேன். இப்போது என் பதவியான காபிரைட்டர், ஒரு பொருட்பன்மொழி!!

”கதகேளு கதகேளு

டால்மியாவின் கதகேளு

தலைமுறைகள் நிலையாக

தொடர்கின்ற கதகேளு

மைக்கேல் மதன காம ராஜன் சேர்ந்து சொல்லக்கேளு

எக்காலத்துக்கும் எல்லாருக்கும் டால்மியாதான் பேரு

கட்டிடங்கள் கட்டும்முன்னே நாலுபேரக் கேளு

டால்மியாவின் பேரத்தான் சொல்வாங்க பாரு”

என்ற பாடலுடன் அந்தப்படம் தொடங்கியது. இதில், ”கட்டிடங்கள் கட்டும் முன்னே நாலுபேரக் கேளு” என்ற வரியில் உள்ள பொதுவான தன்மை டால்மியா நிறுவனத்துக்கு மிகவும் பிடித்துப்போனதால், மைக்கேல் மதன காமராஜன் என்ற வரியை மட்டும் எடுத்துவிட்டு இந்தப் பாடலை வானொலி விளம்பரமாகவும் பயன்படுத்திக்கொண்டார்கள். வானொலி விளம்பரம் பாடலாக வந்தால் ஜிங்கிள் என்று பெயர். உரையாடலாகவோ அறிவிப்பாகவோ வந்தால் ரேடியோ ஸ்பாட் என்றும் பெயர்.

வானொலியில் பண்பலை பல விதி முறைகளைத் தளர்த்தித் தந்தபோது இதுபோல நிறைய சினிமா பாடல்களை சுவீகாரம் செய்து பல விளம்பரங்களை உருவாக்கினோம். வீனஸ் மார்க்கெட்டிங் என்ற விளம்பர நிறுவனம் என்னை இதற்காகவே ரீடெய்னர் முறையில் ஒப்பந்தம் செய்து கொண்டது. ”சின்ன ராசாவே சரல்விக் ஸ்டவ் வாங்கிக் கொடுக்கணும்” என்று குடும்பத் தலைவிகள் பாடினார்கள்.

பிஃப்த் எஸ்டேட் போன்ற நிறுவனங்கள் திரைப்பட இசையைப் பின்பற்றி வெகுமக்கள் ஊடகங்களுக்கான விளம்பரங்கள் உருவாக்குவதை ஊக்குவிப்பதில்லை. சில நிறுவனங்கள் இதற்கு மிகுந்த ஊக்கம் தந்தன. இதற்கு அவர்கள் சொல்கிற காரணம், வாடிக்கையாளர்கள் மனதில் விளம்பரம் இடம்பெறும் என்பதுதான். ரீ கால் வேல்யூ என்று சொல்லி கிளையண்ட்டின் ஒப்புதலைப் பெற்று விடுவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *