மரபின்மைந்தன் கவிதை

தட்டித் திறந்துவிடு

பொன்னில் ஒரு கதவு – உன்
பாதையைத் தடுத்தாலும்
தன்னை மறக்காமல் – அதைத்
தட்டித் திறந்துவிடு

உன்னை விடப் பெரியோர் – இங்கே
உண்மை எதிர்த்தாலும்
சின்னத் தயக்கமின்றி – அட
சீறி எழுந்துவிடு

வீணாய் வம்பெதற்கு – என
விலகி யிருந்தாலும்
பாணம் சீறிவந்தால் – நீ
பாய்ந்து தடுத்துவிடு

சண்டையில் பிரியமில்லை – என்று
சமநிலை கொண்டாலும்
கண்டிடும் தீமைகளை – உன்
கால்களில் எற்றிவிடு

கேள்விகள் கேட்காமல் – இங்கே
கேடுகள் அகல்வதில்லை
ஆள்பலம் எதிர்த்தாலும் – உன்
ஆற்றலை நம்பிவிடு

பொறுக்கும் வரை பொறுத்து – நீ
பொய்யரை எதிர்த்துவிடு
வெறுத்திடத் தேவையில்லை – அவர்
வாழ்க்கையை மாற்றிவிடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *