ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தில் மொழிக்கு கணிசமான பங்குண்டு. தாய்மொழியில் சரளமாகப் பேசவும் எழுதவும் பழகிய தலை முறையில்தான், ஆங்கில ஆளுமையும் பன்மொழிப் புலமையும் சாத்தியமாயிற்று.
தங்களுக்கேயுரிய தாய்மொழியில் வாசிப்போ, கேட்கும் பழக்கமோ அருகிப் போன நிலையிலுள்ள இளைஞர்கள் பலர் கூச்சம், தயக்கம் போன்ற தடைகளால் துயருறுகின்றனர். செம்மொழி மாநாடு கோவையில் நடைபெறும் சூழலில் இல்லங்கள் தோறும் மொழியின் முக்கியத்துவம் உணரப்பட வேண்டும். வாசிப்பும், தமிழ் இலக்கியங்களின் பரப்பு பற்றிய பார்வையும் உருவாக வேண்டும்.
உலகின் பல பகுதிகளிலும் உள்ள தமிழார்வலர்கள் செம்மொழி மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். சிங்கப்பூரில் ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம், தமிழ்மொழி மாதமாகக் கொண்டாடப்படுகிறது. அங்குள்ள தமிழ் அமைப்புகளும் அரசாங்கமும்கூட அந்தக் கொண்டாட்டங்களை முன்னெடுக்கின்றன.
உலககெங்கும் உள்ள தமிழர்கள் தங்கள் நாடுகளிலும் தமிழ்மொழி மாதத்தைக் கொண்டாடுவார்களெனில் அதன் மூலம், உலகெங்கும் தேமதுரத் தமிழோசை பரவ வழிவகை பிறக்கும்.
இல்லங்களில் தொடங்கி உலகமெங்கும் தமிழின்பம் தழைக்கச் செய்ய இந்த நேரத்தில் உறுதி கொள்வோம்.
Leave a Reply