விடியல் கீற்றுக்கள்

விடியல் கீற்றுக்கள்
கவிதை எழுதும்
வைகறைப் பொழுதில்
நாளின் பயணத்தைத் தொடங்கிவிடு!
நாளும் பயணத்தைத் தொடரவிடு!!

சாதனை படைக்க
நாளொன்று கிடைத்ததென
துள்ளி எழுந்துவிடு!
சோம்பலைத் துரத்திவிடு!!

உறங்கி எழுந்ததும்
உள்ளம் முழுக்க
உற்சாகப் பறவைகளைப்
பறக்க விடு!
எழுச்சியின் சிறகுகளை
விரித்து விடு!!
முகம் முழுவதும்
புன்னகை மேகங்களை
இதமாய்த் தவழவிடு!
உறவின் கதவுகளைத் திறந்துவிடு!!

காலையின் வாசலில்
மகிழ்ச்சியின் கோலத்தை
தினம் மலரவிடு!
கனவின் இமைகளைத்
திறந்து விடு!!

ஒவ்வொரு நாளிலும்
புத்தம் புதிதாய்ப் பூத்துவிடு!
பூமியில் வாழ்க்கை
ஒருமுறைதான் புரிந்துவிடு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *