வெள்ளைக் காகிதம் மனமென்றால்
வார்த்தைகள் எல்லாம் எண்ணங்கள்
உள்ளம் நினைப்பதை வைத்துத்தான்
உருப்பெறும் வாழ்வின் வண்ணங்கள்.
வெற்றியை மதிப்பவர் வெல்கின்றார்
விரும்பிய பாதையில் செல்கின்றார்
பெற்றிடும் உணர்வில் தெளிவிருந்தால்
பாதைகள் தனியே வகுக்கின்றார்.
எந்தச் சூழ்நிலை இருந்தாலும்
எண்ணிய வாழ்க்கை அமைத்திடலாம்
வந்திடும் சவால்களின் முதுகேறி
வாழ்க்கைப் பயணத்தில் ஜெயித்திடலாம்.
நேற்றின் வலிகள் நேற்றோடு
நிச்சயம் வெற்றிகள் இன்றோடு
ஊற்றெழும் சக்தியை உணர்ந்தாலோ
உலகம் முழுவதும் உன்னோடு.
ஆர்.ஈஸ்வரன்
கவிதை மிக அருமை.